சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள்). (வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
IFT
முன்பும் பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும். மேலும், அந்நாளில் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட வெற்றியைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சில வருடங்களில் (அவர்கள் வெற்றியடைவர். வெற்றி தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும் (இதற்குப்) பின்னரும் அல்லாஹ்வுக்கே உரியது, (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில், விசுவாசிகள் மகிழ்ச்சியடைவார்கள்.
அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
IFT
என்ன, அவர்கள் தங்களைப்பற்றி என்றைக் கேனும் சிந்தித்ததில்லையா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்துப் பொருட்களையும் சத்தியத்துடனும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவுமே படைத்துள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் தங்கள் அதிபதியின் சந்திப்பை நிராகரிப்பவர்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தங்களைப்பற்றி (அல்லாஹ் அவர்களை எவ்வாறு படைத்துள்ளான் என) சிந்தித்துப் பார்க்கவில்லையா? வானங்களையும், பூமியையும், அவையிரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் உண்மையை (நீதியை)க் கொண்டும், (ஒவ்வொன்றுக்கும்) குறிப்பிடப்பட்ட தவணையைக் கொண்டுமே தவிர அல்லாஹ் படைக்கவில்லை, இன்னும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இரட்சகனின் சந்திப்பை நிராகரிக்கக் கூடியவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமாக பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
மேலும், இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (கவனித்து)ப் பார்க்கவேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளாக இருந்தனர், இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்திச் செய்தார்களோ அதை விட அதிகமாகப் (பூமியைப்) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டு அவர்களிடம் வந்தார்கள், ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை, எனினும் அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கி) தங்களுக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது.
IFT
இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், தீமை செய்து கொண்டிருந்தவர்களின் முடிவு, அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் பொய்யாக்கியதாலும், அவற்றை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததாலும் மிகத் தீயதாகவே ஆகிவிட்டது.
அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) அல்லாஹ்(வே) படைப்பை (ஆரம்பமாக)த் தொடங்குகின்றான், பின்னர், அதனை அவன் மீளவைப்பான், பின்னர் (மனிதர்களே!) நீங்கள் (அனைவரும்) அவனிடமே மறுமைக்காக திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்) அவர்கள் இணைவைத்து வணங்கியவற்றில் அவர்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் இருக்கமாட்டார். (இணைவைத்த) அவர்களும் தாங்கள் இணைவைத்தவற்றைப் புறக்கணித்து விடுவார்கள்.
IFT
அவர்கள் ஏற்படுத்தியிருந்த இணைக்கடவுளர்களில் யாரும் அவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடியவராக இருக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய இணைக் கடவுள்களை நிராகரிப்பவர்களாகி விடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால், அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) அவர்களுடைய இணையாளர்களிலிருந்து பரிந்துரையாளர்கள் அவர்களுக்கு இருக்கவேமட்டார்கள், தாங்கள் இணையாக்கியவர்களை அவர்களும் நிராகரிப்போராகி விடுவார்கள்.
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (மறுமையில் சொர்க்கத்திலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துள்ளார்களோ அவர்கள் சுவனத் தோட்டத்தில் மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் தங்க வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, “விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_(மறுமையில் சுவனபதியிலுள்ள உன்னதமான) பூங்காவனத்தில் அவர்கள் மகிழ்விக்கப்படுவார்கள்.
எவர்கள் நிராகரித்து நம் வசனங்களையும், மறுமை(யில் நமது) சந்திப்பையும் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் வேதனையில் சிக்கிக் கிடப்பார்கள்.
IFT
மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களையும் மறுமைச் சந்திப்பையும் பொய்யென்று கூறியிருந்தார்களோ அவர்கள் வேதனையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.
அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
IFT
அவன் உயிருள்ளவற்றை உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றான், மேலும், அவன் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகின்றான், அவனே பூமியை_அது இறந்த(தாகி வறண்ட) பின் (செழிப்பாக்கி) உயிர்ப்பிக்கின்றான், இவ்வாறே (மரணித்த பின்னர் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
IFT
அவனுடைய சான்றுகளில் ஒன்று அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதாகும். பின்னர், திடீரென நீங்கள் மனிதர்களாக இருக்கிறீர்கள்; (பூமியில்) பரவிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்னர், இப்பொழுது நீங்கள் (பூமியின் பல பாகங்களிலும்) மனிதர்களாக பரவி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்கு நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும், அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, (உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவிலும், பகலிலும் நீங்கள் நித்திரை செய்(து இளைப்பாறிக்கொள்)வதும், (பூமியின் பல பாகங்களுக்குச் சென்று) நீங்கள் அவனுடைய பேரருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், (கவனமாகச்) செவியுறும் சமூகத்தார்க்கு, இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.
அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், மேலும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும், அதன் மூலம் பூமிக்கு அது இறந்துபோன பின் உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும். திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பயமும், ஆதரவும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்துப் பின்னர், அதனைக் கொண்டு பூமியை_அது இறந்த (தாகி வறண்ட) பின் உயிர்ப்பிக்க (வைத்துச் செழிக்க)ச் செய்வதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (அல்லாஹ்வின் பிரமாண்டமான அத்தாட்சிகளை) அறிந்து கொள்ளும் சமூகத்தார்க்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகளிருக்கின்றன.
வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னர்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்.
IFT
மேலும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும். பிறகு, அவன் உங்களைப் பூமியிலிருந்து (வெளியேறி வரும்படி) அழைத்தான். ஒரே ஓர் அழைப்பில் திடீரென நீங்கள் வெளியேறி வருவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானமும், பூமியும் அவன் கட்டளைப்படி நிலைபெற்று நிற்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், பின்னர், அவன் உங்களை ஒருமுறை அழைத்தால், அதே சமயம் நீங்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டுவிடுவீர்கள்.
அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர் கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
அவனே முதன் முறையாகப் படைக்கின்றான். பிறகு, அவனே அதை மறுமுறையும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய தன்மை மிக உயர்ந்ததாகும். மேலும், அவன் வலிமை மிக்கவன்; நுண்ணறிவாளன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், படைப்பை (முன் மாதிரியின்றியே ஆரம்பமாக) அவன் தொடங்குகின்றான், பின்னர் அதை அவன் மீளவைக்கிறான், இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். வானங்களிலும், பூமியிலும் மிக்க மேலான வர்ணனை(பண்பு) அவனுக்குரியதே, மேலும், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்கள் பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட்படுத்துவதைப்போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவற்றை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்.
IFT
அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உவமையை கூறுகின்றான்: உங்களுக்குச் சொந்தமான அடிமைகளில் யாராகிலும் நாம் உங்களுக்கு வழங்கிய செல்வத்தில் உங்களுக்குச் சரியான பங்காளிகளாய் இருக்கின்றார்களா? மேலும், நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்கு பரஸ்பரம் அஞ்சுவதுபோல் அவர்களுக்கு அஞ்சுகின்றீர்களா? சிந்தித்துச் செயல்படும் மக்களுக்கு இவ்வாறே நாம் நம்முடைய வசனங்களைத் தெளிவாக விளக்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) உங்களிலிருந்தே உங்களுக்கு ஓர் உதாரணத்தை (அல்லாஹ்வாகிய) அவன் கூறுகிறான்; உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிலிருந்து, நாம் உங்களுக்கு வழங்கிய (செல்வம், அதிகாரம் முதலிய)வற்றில், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக இருக்கும் கூட்டுக்காரர்கள் உங்களுக்கு உண்டா? நீங்கள் உங்களைப்(போன்ற சுதந்திரமான கூட்டுக்காரர்களின் நன்மை, தீமைகளை) பயந்து கொள்வது போன்று (உங்களுக்குச் சமமான கூட்டுக்காரர்களாக அடிமைகளான அவர்கள் ஆகிவிடும் விஷயத்தில்) அவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள்; (உங்கள் இனத்தைச் சேர்ந்த அடிமையை உங்களுக்கு சமமானவர்களாக ஆக்க நீங்கள் விரும்பாத போது, அல்லாஹ்வுக்கு மற்றவர்களை எவ்வாறு சமமாக்குகிறீர்கள்?) அறிவுடைய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்.
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டுத்) தங்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டு விட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் யார்? இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை.
IFT
ஆயினும், இந்த அக்கிரமக்காரர்கள் எவ்வித அறிவுமின்றி தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்கின்றார்கள். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ, இனி அவருக்கு வேறு எவரால் வழிகாட்ட முடியும்? இத்தகையோருக்கு உதவியாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே தங்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர், எனவே, அல்லாஹ் எவர்களை வழிகெடுத்துவிட்டானோ அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வபவர்களும் இல்லை.
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்.
IFT
எனவே (நபியே, இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது. இதுதான் முற்றிலும் நேரானசெம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் உம்முடைய முகத்தை மார்க்கத்தின்பால் (முற்றிலும்) திருப்பியவராக நிலைநிறுத்தி விடுவீராக! அல்லாஹ் மனிதர்களை எ(ந்த மார்க்கத்)தில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்க(மாகிய இஸ்லா)த்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை, இதுவே (சரியான) நிலையான மார்க்கமாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
IFT
அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாய் (அதில் நிலைத்திருங்கள்). மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். மேலும், இணைவைப்பாளர்களுடன் நீங்கள் சேர்ந்து விடாதீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) அவன்பக்கமே திரும்பியவர்களாக (இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் நிலைத்திருங்கள்), இன்னும் அவனை பயந்து கொள்ளுங்கள், தொழுகையையும் நிறைவேற்றுங்கள், மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வற்றைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்.
IFT
அவர்களோ தங்களுடைய மார்க்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து, பல குழுக்களாகப் பிரிந்து விட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரிந்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிட வேண்டாம் அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவோரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர்.
மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களை ஒரு தீங்கு அணுகும் போது அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் முகம் நோக்கி அவனிடம் பிரார்த்திக்கிறார்கள். பின்னர் அவன் (அதை நீக்கி) அவர்களைத் தன் அருளைச் சுவைக்கும்படிச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.
IFT
மக்க(ளின் நிலைமை என்னவெனில், அவர்க)ளுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்பியவாறு அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் தன்னுடைய அருட்கொடையில் சிறிதளவை அவர்களுக்குச் சுவைக்கக் கொடுத்தால், உடனே அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனுக்கு இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களை ஏதேனுமொரு தீங்கு தொட்டுவிடுமானால் அவர்கள் தங்கள் இரட்சகனை_(கலப்பற்ற இதயத்துடன் அவனுக்கு இணையளார்களை ஆக்காது) அவன் பாலே திரும்பியவர்களாக (அவனை மட்டும் பிரார்த்தித்து) அழைக்கின்றார்கள், பின்னர், அவன் (அத்தீங்கை நீக்கி) அவர்களை தன்னிடமிருந்துள்ள அருளை சுவைக்கும்படிச் செய்தால், அப்பொழுது அவர்களிலிருந்து ஒரு பிரிவினர், தங்களுடைய இரட்சகனுக்கே இணை வைக்கின்றனர்.
நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு நிராகரிப்பவர்களே!) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். (உங்கள் செயலின் பலனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
IFT
நாம் அவர்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கொல்லும் பொருட்டு! சரி, அனுபவித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களுக்குக் கொடுத்ததை அவர்கள் நிராகரிப்பதற்காக (இணை வைக்கிறார்கள்) ஆகவே, நீங்கள் (இவ்வுலகில்) சுகமனுபவியுங்கள், (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இணைவைத்து வணங்குவதற்கு ஆதாரமாகக் கூறக்கூடிய ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? (அவ்வாறு ஒன்றும் இல்லையே.)
IFT
இவர்கள் செய்துவரும் இணைவைப்புச் செயல் சரியானதுதான் எனச் சான்று பகர்கின்ற ஏதேனும் ஆதாரத்தை நாம் இவர்கள் மீது இறக்கி வைத்திருக்கின்றோமோ, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (வணக்கத்தில் இணையாக்கும்) இவர்களுக்கு யாதோர் சான்றை நாம் இறக்கி வைத்திருக்கிறோமோ? அப்போது அது, அவர்கள் எதைக் கொண்டு இணைவைத்து (அவர்கள் வணங்கி)க் கொண்டிருக்கிறார்களோ அது பற்றிகூறும், (ஆனால் அவ்வாறு எதுவுமில்லை).
இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் நம் அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கேற்படும்போது உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.
IFT
நாம் மக்களுக்கு ஏதேனும் அருட்கொடையை சுவைக்கக் கொடுத்தால், அதில் அவர்கள் பூரித்துப் போய்விடுகின்றார்கள். மேலும், தாங்கள் செய்த தீவினைகளினால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டால் உடனே அவர்கள் நிராசை அடைந்துவிடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நாம் மனிதர்களுக்கு (நம்முடைய) அருளைச்சுவைக்கச் செய்தால், அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், அவர்களுடைய கைகள் முற்படுத்தியவற்றின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீ்ங்கேற்பட்டால், அப்பொழுது அவர்கள் நிராசையடைந்து விடுகிறார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை தாராளமாகக் கொடுக்கின்றான்; (தான் நாடுவோர்க்கு) அளவோடு கொடுக்கின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரங்களை விசாலமாக்குகிறான், (தான் நாடியவர்களுக்கு) அளவோடு (சுருக்கியும்) கொடுக்கிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? விசுவாசங்கொண்ட சமூகத்தாருக்கு, நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.
IFT
எனவே (நம்பிக்கையாளனே!) உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் (அவர்களின் உரிமையையும் தந்துவிடு). அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே! உமது பொருளில்) உறவினருக்கு_அவருடைய உரிமையை கொடுத்துவிடுவீராக! (அவ்வாறே) ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவர்களுடைய பாத்தியதையைக் கொடுத்துவிடுவீராக!) அல்லாஹ்வுடைய திரு முகத்தை நாடுகிறவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும், மேலும் இத்தகையோர் தாம் வெற்றியாளர்கள்.
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்.
IFT
மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மற்ற) மனிதர்களுடைய பொருட்களில் (சேர்ந்து உங்கள் பொருள்களும்) பெருகி (வளர்ந்து) விடுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கிறீர்களே அது அல்லாஹ்விடத்தில் (பெருகி) வளர்வதில்லை, அன்றியும், அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை நாடியவர்களுக்கு ஜகாத்திலிருந்து எதை நீங்கள் கொடுக்கின்றீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளரும்.) இத்தகையோர்தாம் (தம் கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவர்.
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; அவன் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணமடையச் செய்கின்றான்; பிறகு மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். என்ன, நீங்கள் இணை வைக்கும் தெய்வங்களில் யாராவது இவற்றுள் எதையாவது செய்பவர் இருக்கின்றாரா? அவன் தூய்மையானவன்; இம் மக்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களைவிட்டு அவன் மிக உயர்ந்தவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் உங்களைப் படைத்தான், பின்னர் அவன் உங்களுக்கு வாழ்வாதாரங்களைக் கொடுத்தான், பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான், பிறகு அவன் உங்களை உயிர்ப்பிப்பான், அவற்றில் எதையேனும் ஒன்றைச் செய்பவர்கள் உங்கள் இணையாளர்களில் (எவரேனும்) உண்டா? அவன் தூயவன், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அவனே மிகவும் உயர்ந்தவன்.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான்.
IFT
மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு_) குழப்பம் வெளிப்பட்டுவிட்டதும், அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்கள் அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதிக்கிறான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்.
“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: “பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள். முன்பு வாழ்ந்து சென்ற மக்களின் கதி என்னவாயிற்று என்பதை! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதைப் பாருங்கள், (முன்னிருந்த) அவர்களில் பெரும்பாலோர், இணைவைத்துக் கொண்டிருப்போராகவே இருந்தனர்.”
ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது முகத்தை நிலையான (நீதமான) மார்க்கத்தளவில் திருப்பிவிடுவீராக. அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.
IFT
எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக; அல்லாஹ்விடமிருந்து எவராலும் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாத ஒருநாள் வருமுன்! அந்நாளில் மக்கள் பிளவுண்டு, தனித்தனியே பிரிந்து சென்று விடுவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) அல்லாஹ்விடமிருந்து அதை தடுத்து விட முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உம்முடைய முகத்தை நிலையான மார்க்கத்தின் பக்கம் (திருப்பி) நிலை நிறுத்துவீராக! அந்நாளில் (நல்லோர் தீயோர் வெவ்வேறாகப்) பிரிந்துவிடுவார்கள்.
எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கிறாரோ அவர் (அதை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார்.
IFT
எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும். மேலும், எவர்கள் நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்காகவே (வெற்றியின் வழியைத்) தயார்படுத்துகின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் (அல்லாஹ்வை) நிராகரித்தாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதே (கேடாக) இருக்கும் எவர் நற்காரியங்களைச் செய்தாரோ, அவர்கள் (அதன் மூலம் மறுமையில்) தங்களுக்கே (அருட்கொடைகளின் நன்மைகளை) அமைத்துக் கொள்கிறார்கள்.
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை.
IFT
இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து கூலி வழங்குவதற்காக! திண்ணமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்தோருக்கு (அல்லாஹ்வாகிய) அவன் தன் பேரருளிலிருந்து கொடுப்பதற்காக (அவர்கள் அந்நாளில் பிரிந்துவிடுவார்கள்) நிச்சயமாக அவன் நிராகரிப்போரை நேசிக்கமாட்டான்.
இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளிலும் நாடுகளிலும் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இவற்றுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
IFT
மேலும், நற்செய்தி கூறுவதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மழையைக்கொண்டு) நற்செய்தி கூறுபவைகளாக காற்றுகளை அவன் அனுப்புவது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், அவன் கட்டளையைக் கொண்டு கப்பல்கள் (கடலில்) செல்வதற்காகவும் (அவற்றின் மூலம் பிராயணம் செய்து) அவனின் பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்க்காகவும் (அவன் காற்றுகளை நன்மாராயமாக அனுப்புகிறான்).
மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த)குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது.
IFT
மேலும், நாம் உமக்கு முன்னர் தூதர்களை அவரவருடைய சமூகத்தாரிடையே அனுப்பினோம். அவர்கள் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர், எவர்கள் குற்றம் புரிந்தார்களோ அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம்மீது கடமையாக இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) திட்டமாக நாம் உமக்கு முன்னர் அநேக தூதர்களை அவர்களுடைய சமூத்தார்களிடம் அனுப்பிவைத்தோம், அவர்களும் தெளிவானவை(களான அத்தாட்சி)களை அவர்களிடம் கொண்டுவந்தனர், (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து குற்றமிழைத்தனர்.) ஆகவே, குற்றமிழைத்தோரை நாம் தண்டித்தோம், விசுவாசிகளுக்கு உதவி செய்வதும் நம்மீது கடமையாக இருந்தது.
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீர் காண்கிறீர். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
IFT
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான்; அது மேகத்தைக் கிளப்பிவிடுகின்றது. பிறகு அவன் நாடும் விதத்தில் மேகங்களை வானத்தில் பரப்புகின்றான். அவற்றைப் பல துண்டுகளாய்ப் பிரிக்கின்றான். பின்னர் அவற்றுக்கிடையில் இருந்து மழைத்துளிகள் உதிர்ந்து விழுவதை நீர் காண்கின்றீர். தன் அடிமைகளில் தான் நாடுபவர்கள் மீது அவன் இந்த மழையைப் பொழிவிக்கும்போது அவர்கள் உடனே மகிழ்ந்து போய்விடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எத்தகையவனென்றால் _ அவன் காற்றுகளை அனுப்பிவைக்கிறான். பின்னர், அவை மேகங்களை ஓட்டுகின்றன, பிறகு தான் நாடியவாறு அதனை வானத்தில் பரத்துகிறான், அதைப் பல துண்டுகளாகவும் அவன் ஆக்கிவிடுகிறான், பின்னர், அதன் மத்தியிலிருந்து மழை வெளிவருவதை நீர் காண்பீர், பிறகு தன் அடியார்களில் தான் நாடியவருக்கு அதை வந்தடையும்படி அவன் செய்துவிட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்.
IFT
அல்லாஹ்வுடைய அருளின் பலன்களைப் பாருங்கள். இறந்து கிடக்கும் பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கின்றான்? திண்ணமாக, அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவனாவான். மேலும், அவன் யாவற்றின்மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின், அடையாளங்(களான பலன்)கள்பால் நீர் கவனிப்பீராக! பூமியை, அது இறந்த(தாகி வறண்ட) பின் எவ்வாறு (செழிக்கச் செய்து) அவன் உயிர்ப்பிக்கின்றான், நிச்சயமாக இறந்தோரையும் அவன் உயிர்ப்பிக்கிறவன், மேலும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்கள் பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த அருளையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.
IFT
மேலும், நாம் காற்றை அனுப்பி, அதனால் அவர்களின் பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் காண்பார்களானால், அப்பொழுது அவர்கள் நன்றி கொன்றவர்களாகி விடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வறண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி, அ(தைக்கொண்டு பயிரான)தை மஞ்சணித்திருப்பதாக அவர்கள் கண்டால், அதன் பின்னர் (நன்றியை மறந்து) நிராகரிப்போராகவே இருந்துவிடுகின்றனர்.
ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.
IFT
(நபியே!) இறந்தவர்களைச் செவியேற்கச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை உம்முடைய அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) நிச்சயமாக நீர் இறந்தோரைச் செவியுறச் செய்யமாட்டீர், (உம்மால் முடியாது) இன்னும் செவிடர்களையும் அவர்கள் புறமுதுகிட்டவர்களாக புறக்கணித்து திரும்பிச் சென்றால் நீர் (உம்முடைய) அழைப்பை செவியுறச் செய்யமாட்டீர்.
இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழியில் திருப்பிவிடவும் உம்மால் முடியாது. முற்றிலும் வழிப்பட்டவர்களாக நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர மற்றவர்களை (உமது நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க வைக்க உம்மால் முடியாது.
IFT
மேலும், குருடர்களை வழிகேட்டிலிருந்து வெளியேற்றி, அவர்களை நேர்வழியில் கொண்டு வரவும் உம்மால் முடியாது. ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் குருடர்களை_அவர்களுடைய வழிகேட்டை விட்டும் (திருப்பி) நேர் வழியில் செலுத்துபவராகவும் நீர் இல்லை, நம்முடைய வசனங்களை விசுவாசங்கொள்பவர்களை தவிர, (மற்றெவரையும்) நீர் செவியுறச் செய்யமாட்டீர், (விசுவாசித்த) அவர்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்கள்.
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு (உங்களை) ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனும் அவான்.
IFT
நீங்கள் பலவீனமான நிலையிலிருந்தபோது உங்களைப் படைக்கத் தொடங்கியவன் அல்லாஹ்தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர் அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும் முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், யாவற்றின்மீதும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் _ எத்தகையவனென்றால், உங்களை (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து அவன் படைத்தான்; பின்னர் பலவீனத்திற்க்குப் பிறகு (உங்களுக்கு) பலத்தையும் உண்டாக்கினான்; அப்பால் (அப்)பலத்திற்குப் பின்னர் (முதுமையின்) பலவீனத்தையும், முதுமைப் பருவத்தையும் ஆக்கினான்; தான் நாடியதைப் படைக்கிறான்; மேலும், அவனே (யாவையும்) நன்கறிந்தோன், மிக்க ஆற்றலுடையோன்.
அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர்.
IFT
மேலும், அந்த நேரம் வரும்போது குற்றவாளிகள், “நாங்கள் ஒரு நாழிகை நேரத்திற்குமேல் தங்கவில்லை” என்று சத்தியம் செய்து கூறுவார்கள். இதே போன்றுதான் இவர்கள் (உலக வாழ்க்கையில்) ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மறுமைநாள் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் (இவ்வுலகில்) கொஞ்ச நேரமே தவிர தாங்கள் தங்கியிருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்தில் உண்மையைவிட்டும்) திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.
ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்'' என்றும்,
IFT
ஆனால் ஞானமும், இறைநம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவர்: “அல்லாஹ்வின் பதிவேட்டிலுள்ளபடி, மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் நாள்வரை நீங்கள் தங்கியிருந்திருக்கின்றீர்கள். இதோ, எழுப்பப்படும் அந்த நாள்தான் இது. ஆயினும், நீங்கள் அறியாதவர்களாய் இருந்தீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மார்க்க) அறிவும், விசுவாசமும் கொடுக்கப்பட்டிருந்தார்களே அத்தகையவர்கள், (அதனை மறுத்து) ”அல்லாஹ்வின் ஏட்டில் உள்ளவாறு நீங்கள் உயிர்ப்பெற்றெழும் (இந்)நாள் வரை திட்டமாகத் தங்கியிருந்தீர்கள், எனவே இது(தான்) எழுப்பப்படும் நாள், எனினும் நிச்சயமாக நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா; அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆனால், அந்நாளில் அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அவர்கள் இறைவனைத் திருப்திபடுத்தவும் வழி இருக்காது'' என்றும் கூறினார்கள்.
IFT
ஆக, அக்கிரமக்காரர்களுக்கு அந்நாளில் அவர்களுடைய சாக்குபோக்கு எந்த பலனையும் அளித்திடாது. மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் கூறப்படவுமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே அந்நாளில் அநியாயம் செய்தவர்களுக்கு அவர்களின் புகல்கள் பயனளிக்காது; (அவர்களின் இரட்சகனைத் திருப்திப்படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப்படுத்தப் படவுமாட்டார்கள்.
திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்: “நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை” என்று நிராகரிப்போர் நிச்சயமாக கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். (இதை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேதவிர வேறில்லை'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
IFT
நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமாகப் புரியவைத்திருக்கின்றோம். நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்து விட்டவர்கள் ‘நீர் அசத்தியத்தில் இருக்கின்றீர்’ என்று கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களுக்கு வேண்டிய ஒவ்வொரு (விதமான) உதாரணத்தையும் இந்தக் குர் ஆனில் நிச்சயமாக நாம் கூறி இருக்கிறோம், மேலும், எந்த அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்த போதிலும், (நபியே! உம்மையும், விசுவாசிகளையும் நோக்கி) ”நீங்கள் பொய்யர்களேயன்றி (வேறு) இல்லை” என்று நிராகரிப்போர் நிச்சயமாகக் கூறுவார்கள்.
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம்.
IFT
எனவே (நபியே!) பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராக (அலட்சியத்துக்குரியவராக) காணக்கூடாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) நீர் பொறுமையாய் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும்; (ஆகவே முடிவில் நீர் தான் மிகைப்பீர், மறுமையை) உறுதிகொள்ளாதோர் நிச்சயமாக உம்மை, இலேசாகக் கருதிவிட வேண்டாம்.