அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுவார்கள். ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். இறுதி நாளையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
IFT
அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள், ஜகாத்தையும் கொடுப்பார்கள், இன்னும், அவர்கள்_மறுமையைக் கொண்டு அவர்களே_உறுதி(யாக நம்பிக்கைக்) கொள்வார்கள்.
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களைத் தவிர) மனிதரில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து அதைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.
IFT
மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களைத் தவிர) மனிதரில்_அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து (மனிதர்களை) வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர், (அல்லாஹ்வின் வசனங்களாகிய) அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இத்தகையோர் _ அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களில் எவருக்கும் நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை அவன் கேட்காதவனைப் போலும், தன் இரு காதுகளிலும் செவிடு உள்ளவனைப் போலும் கர்வம்கொண்டு விலகிவிடுகிறான். ஆகவே, (நபியே!) அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக!
IFT
அவனிடம் நம் வசனங்கள் ஓதிக்காண்பிக் கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற்பெருமையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றான். எனவே, துன்புறுத்தும் வேதனை குறித்து அவனுக்கு நற்செய்தி கூறிவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அ(த்தகைய)வனின் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவற்றை அவன் கேட்காதவனைப் போல், தன்னுடைய இரு காதுகளிலும் தடுப்பு உள்ளவனைப் போல் கர்வங்கொண்டவனாக(ப்புறக்கணித்து)த் திரும்பிவிடுகிறான். ஆகவே, அவனுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (இவர்களில்) எவர்கள் (நம் வசனங்களுக்குச் செவி சாய்த்து) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உள்ளன.
IFT
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனத்தோப்புகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு அருட்கொடையுடைய சுவனபதிகளுண்டு.
அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி உண்மையானதே! அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். மேலும், இது அல்லாஹ்வின் வலுவான வாக்குறுதியாகும். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்கள் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்) வாக்குறுதி உண்மையானதே! அவனோ (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே வானங்களைத் தூண்கள் இன்றியே படைத்திருக்கிறான். அதை நீங்களும் பார்க்கிறீர்கள். பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருப்பதற்காக (பளுவான) மலைகளை (அதில்) நிறுத்திவைத்து விதவிதமான உயிரினங்களையும் அதில் பரப்பினான். (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே மேகத்தில் இருந்து மழையை பொழியச்செய்து அதிலிருந்தே நேர்த்தியான ஒவ்வொரு வகைப் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாக முளைப்பிக்கச் செய்கிறோம்.
IFT
அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். மேலும், அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான்; அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காக! மேலும் எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கின்றான். மேலும், வானிலிருந்து மழை பொழிய வைத்து பூமியில் விதவிதமான பயன்மிகு தாவரங்களை முளைக்கச் செய்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்திருக்கிறான், அதனை நீங்கள் பார்க்கின்றீர்கள், பூமியில்_அது உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்கும் பொருட்டு, அசையாத மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான், இன்னும், ஒவ்வொரு (விதமான) பிராணியையும் அதில் அவன் பரவச்செய்தான், (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே வானத்திலிருந்து நீரை இறக்கிவைத்தோம், பின்னர், (புற்பூண்டுகளில்) அழகான ஒவ்வொரு வகையிலிருந்து அதில் நாம் முளைக்கச் செய்தோம்.
“இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கிக் கூறுவீராக) ‘‘ இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனையன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவை எதை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
IFT
இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புகள்! இனி அவனை விடுத்து மற்றவர்கள் என்ன படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! உண்மை யாதெனில், அக்கிரமக்காரர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக:) “இவை (யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும், ஆகவே அவனையன்றி (நீங்கள் வணக்கத்திற்குரியவர்களெனக் கூறுகின்ற) அவர்கள் எதனைப் படைத்திருகின்றனர் என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள், (அவ்வாறு ஒன்றும்) இல்லை (அல்லாஹ்வையன்றி மற்றவைகளை வணங்கும் இந்த) அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்.
இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”.
அப்துல் ஹமீது பாகவி
லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் நிராகரிக்கிறானோ (அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனும் ஆவான்.
IFT
நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம். நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத் தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் லுக்மானுக்கு (ச்சிறந்த) அறிவையும் கொடுத்தோம், நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! (என்று கூறினோம்) இன்னும், எவர் நன்றி செலுத்துகின்றாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தம(துநன்மை)க்குத்தான், மேலும், எவர் (அவனை) நிராகரிக்கின்றாரோ_(அவர் தனக்கே தீங்கைத் தேடிகொள்கிறார். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழப்படுபவன் (என்று கூறினோம்).
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
அப்துல் ஹமீது பாகவி
லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார்.
IFT
மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்: “என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு_அவர் அவருக்கு உபதேசம் செய்தவராக_ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை_(நபியே! நீர் நினைவு கூர்வீராக!)
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
IFT
மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம், அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தாள், இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டு வருடங்களிலாகும், (ஆகவே மனிதனே!) நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக, (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது.”
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்).
IFT
ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்துகொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ, அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படியவேண்டாம்; ஆயினும், இவ்வுலகத்தில் நன்மையான காரியத்தில் நீ அவ்விருவருடனும் (அன்புடன் ஒத்து) உடனிருப்பாயாக; இன்னும், (வழிபாட்டில்) என்பால் திரும்பியவரின் வழியை நீ பின்பற்றுவாயாக; பின்னர் நீங்கள் யாவரும் என்னிடமே திரும்பி வந்து சேர வேண்டியதிருக்கின்றது; அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘ என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான்.
IFT
(மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னருமை மைந்தனே! நிச்சயமாக அது (நன்மையோ, தீமையோ) கடுகின் வித்தளவாக இருப்பினும் (சரி) அது ஒரு பாறைக்குள் அல்லது வானங்களில் அல்லது பூமியில் (மறைந்து) இருந்த போதிலும் (கேள்வி கணக்கின் போது) அல்லாஹ் அதனைக் கொண்டுவந்துவிடுவான், (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான (அறிவுடைய)வன், நன்கு உணர்பவன்.
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.
IFT
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னருமை மைந்தனே! நீ தொழுகையை நிறைவேற்றுவாயாக! நன்மையைக் கொண்டும் (பிறரை) ஏவுவாயாக! பாவமான கரியாங்களிளிருந்தும் (மனிதர்களை) விலக்குவாயாக! மேலும், உனக்கேற்படும் கஷ்டங்களை, நீ பொறுமையுடன் சகித்துகொள்வாயாக! நிச்சயமாக (அல்லாஹ் கட்டளையிட்ட) இது காரியங்களில் உறுதியானதில் உள்ளதாகும்.”
“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
IFT
மேலும், மக்களைவிட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிகொள்ளாதே! மேலும், பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ், தற்பெருமைக்காரர், கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.”
“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).
IFT
உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “உன் நடையில் மத்தியதரத்தை கடைப்பிடிப்பாயாக! உன் சப்தத்தையும் தாழ்த்திகொள்வாயாக! (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது, கழுதைகளின் சப்தமே” என்று கூறினார்).
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட் கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் ஒரு கல்வியும், (தர்க்க ரீதியான) வழிகாட்டலும், தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.
IFT
நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், வெளிப்படையான மற்றும் மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான். (இவ்வாறிருந்தும்) மனிதர்களில் சிலர் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றார்கள்; எவ்வித ஞானமும், வழிகாட்டலும் அல்லது ஒளிதரும் வேதமும் அவர்களிடம் இல்லாமலேயே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை (அவற்றில்) வெளிப்படையானவற்றையும், மறைவானவற்றையும் உங்கள் மீது நிறைவாக்கியிருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (ஆனால்) மனிதர்களில் சிலர் கல்வியறிவோ, நேர் வழியோ, ஒளிமிக்க வேத (ஆதார)மோ இன்றி, அல்லாஹ்வைப் பற்றி (வீணாக)த் தர்க்கிக்கின்றனர்.
“அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நோக்கி, ‘‘அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்'' எனக் கூறினால், அதற்கு அவர்கள் ‘‘ இல்லை, எங்கள் மூதாதைகள் எதன் மீது இருக்க நாங்கள் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். (என்னே!) அவர்கள் மூதாதைகளை ஷைத்தான் நரக வேதனையின் பக்கம் அழைத்து (அவர்களும் சென்று) இருந்தாலுமா? (இவர்கள் அவர்களைப் பின்பற்றிச் செல்வார்கள்!)
IFT
“அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “இல்லை, எங்கள் மூதாதையர்களை எவ்வழியில் கண்டோமோ, அவ்வழியையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாலுமா, இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், ”அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என அவர்களுக்கு கூறப்பட்டால், (அதற்கு) அவர்கள், “அவ்வாறல்ல! எங்கள் மூதாதையரை எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ, அதனையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர், அவ(ர்களின் மூதாதையர்)களை ஷைத்தான் கொழுந்துவிட்டெரியும் வேதனையின்பால் அழைத்தாலுமா (அவர்களைப் பின்பற்றுவார்கள்)?
எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
எவர் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, பணிந்து நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு வளயத்தைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
IFT
மேலும், எவர் தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு தன்னை முற்றிலுமாக அல்லாஹ்விடம் ஒப்படைத்தாரோ அவர் உண்மையில் நம்பகமான உறுதியானதொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொண்டவராவார். மேலும், அனைத்து விவகாரங்களுடையவும் இறுதி முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர்_அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தை திருப்புகிறாரோ அவர், நிச்சயமாக மிக மிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துகொண்டார், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.
(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது; அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவரேனும் (உம்மை) நிராகரித்து விட்டால், அவர்களுடைய நிராகரிப்பு உம்மைத் துக்கத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் நம்மிடமே வரவேண்டும். அச்சமயம் அவர்களுடைய (இச்)செயலைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
IFT
இனி யாரேனும் நிராகரித்தால், அவனுடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். எம்மிடமே அவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது அவர்கள் என்ன செய்து விட்டு வந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நாம் அறிவித்து விடுவோம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களை அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) எவர் நிராகரித்துவிட்டாரோ, அவருடைய நிராகரிப்பு உமக்குக் கவலையை உண்டாக்க வேண்டாம், அவர்களின் மீளுதல் நம் பக்கமேயாகும், அது சமயம் அவர்கள் செய்தவற்றைப் பற்றி நாம் அவர்களுக்கு அறிவிப்போம், நிச்சயமாக அல்லாஹ், (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவைகளை நன்கறிகிறவன்.
அவர்களை நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர் நாம் அவர்களை மிகவும் கடுமையான வேதனையில் (புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை (இச்சமயம்) சிறிது சுகமனுபவிக்கும்படி நாம் விட்டு வைப்போம். பின்னர், கடுமையான வேதனையின் பக்கம் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்தித்து விடுவோம்.
IFT
சொற்ப காலம் உலகில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நாம் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு கடினமான ஒரு வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக இழுத்துக் கொண்டுவருவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இம்மையில்) அவர்களைச் சிறிது சுகமனுபவிக்கச் செய்வோம், பின்னர், கடுமையான வேதனையின்பால் (செல்லும்படி) நாம் அவர்களை நிர்ப்பந்திப்போம்.
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், “அல்லாஹ்” என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்று நீர் கூறுவீராக; எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்.
IFT
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று நீர் கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின் அ(தற்க)வர்கள், “அல்லாஹ்” என்று நிச்சயமாக கூறுவார்கள், (அது பற்றி) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இரட்சகனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறியமாட்டார்கள்.
மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியிலுள்ள மரங்கள் (செடிகள் என) அனைத்தையும் எழுது கோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல்களின் நீரையும் மையாக வைத்து எழுதிய போதிலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் (எழுதி) முடிவு பெறாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
பூமியிலுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களானாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போகமாட்டா. திண்ணமாக அல்லாஹ் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் (யாவும்) எழுது கோல்களாகவும், கடல் (நீர் யாவும் மையாக இருந்து) அ(து தீர்ந்த)தற்கு பின்னர் ஏழுகடல்கள் அதனுடன் (மையாக) சேர்ந்து (கொள்ள அவற்றால் எழுதிக்) கொண்டிருந்தாலும் அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீராது, நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்.
IFT
மனிதர்களாகிய உங்களைப் படைப்பதும், பின்னர், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் (அவனைப் பொறுத்து) ஒரே ஓர் உயிரைப் (படைத்துப் பின்னர் உயிர் கொடுத்து எழுப்புவது) போன்றதேயாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) உங்களை(ப் புதிதாக)ப் படைப்பதும், (மரணித்தபின்) உங்களை (மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்புவதும் ஓர் ஆத்மாவைப் படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர (வேறு) இல்லை நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்தான் இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைத்து சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்திற்குள்) அடக்கி வைத்திருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றும் (அவற்றுக்கு அவன்) குறிப்பிட்ட திட்டப்படியே நடக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
IFT
நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்தான் இரவைப் பகலில் கோத்துக்கொண்டு வருகின்றான். பகலை இரவில் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், நீங்கள் செய்கின்றவற்றை, அல்லாஹ் நன்கு புரிந்தவன் (என்பதையும் நீங்கள் அறியவில்லையா?)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகவைக்கிறான், பகலை இரவில் புகவைக்கிறான் என்பதையும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? (இவற்றில்) ஒவ்வொன்றும் குறிப்பிடபட்ட தவணையின்பால் நடக்கின்றன, இன்னும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.
எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை; மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவையனைத்தும் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்'' என்பதற்கும் அத்தாட்சிகளாக இருக்கின்றன.
IFT
இவற்றிற்குக் காரணம் அல்லாஹ்தான் சத்தியமானவன் என்பதும், அவனைத் தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை என்பதும், மேலும், அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கின்றான் என்பதுமேயாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்_அவனே மெய்யானவனாவான், அவனைத் தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும், மேலும், நிச்சயமாக அல்லாஹ்_அவனே (சகலரையும்விட) உயர்வுடையவன், மிகப்பெரியவன் என்ற காரணத்திலாகும்.
தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சயமாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்வின் அருளினால் கப்பல் கடலில் செல்கின்றது; அவன் தன்னுடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், பொறுமையாளராகவும், நன்றி செலுத்துபவராகவும் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் அநேக சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அவன் காண்பிப்பதற்காக வேண்டி அல்லாஹ்வின் அருட்கொடையைக் கொண்டு, கடலில் நிச்சயமாக கப்பல் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில், அதிகமாகப் பொறுமையுடையோர் _ நன்றியுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.
IFT
மேலும் (கடலில்) மலைகளைப் போன்ற அலை இவர்களைச் சூழ்ந்துகொண்டால், இவர்கள் தங்கள் தீனை மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே முற்றிலும் உரித்தாக்கியவர்களாய் அவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். பின்னர் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்போது அவர்களில் சிலர் மிதமான போக்கைக் கைக்கொள்கின்றனர். வேறு யாரும் நம்முடைய சான்றுகளை மறுப்பதில்லை; பெரும் துரோகிகளையும், முற்றிலும் நன்றி கெட்டவர்களையும் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கடலில் பிரயாணிக்கும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள், மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில் அல்லாஹ்வை_அவனுக்கே மார்க்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக_அவர்கள் அழை(த்து பிரார்த்தி)க்கின்றனர்; அவன், அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டால், அப்போது அவர்களில் (அல்லாஹ்வை விசுவாசங் கொள்ளும்) நீதமானவரும் உண்டு; இன்னும் மிக நன்றிகெட்ட பெரும் சதிகாரர்களைத் தவிர, (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.
மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
IFT
மனிதர்களே! உங்கள் அதிபதியின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஒரு நாளைக் குறித்து அஞ்சுங்கள். அன்று எந்தத் தந்தையும் தன் மகனுக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. மேலும், எந்த மகனும் தன் தந்தைக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. நிச்சயமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், ஏமாற்றுக்காரனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! உங்கள் இரட்சகனுக்கு பயந்து கொள்ளுங்கள், இன்னும், ஒரு நாளை பயப்படுங்கள், (அந்நாளில்,) எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு உதவமாட்டான், எந்தப் பிள்ளையும் தன் தந்தைக்கு எத்தகைய உதவியும் செய்பவனாக இல்லை. நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி, உண்மையானதாகும், ஆகவே, நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவனும், அல்லாஹ்வைப்பற்றி உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (உலக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்)தான் இருக்கிறது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். அவனே கர்ப்பங்களில் (கரு) தரிப்பதையும் அறிவான். (அவனைத் தவிர) எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான்.
IFT
(இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த வேளையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். அன்னையரின் கருவறைகளில் வளர்ந்து கொண்டிருப்பவை என்ன என்பதையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்_அவனிடம்தான் மறுமைநாள் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையையும் இறக்கிவைக்கிறான், அவனே கர்ப்பங்களில் உள்ளவைகளையும் அறிகிறான், எந்த ஆத்மாவும், நாளை அது எதைச் சம்பாதிக்கும் என அறியாது. மேலும், எந்த ஆத்மாவும் எந்தப் பூமியில் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதையும் அறியாது, நிச்சயமாக அல்லாஹ் (அவனே) நன்கறிகிறவன், (செய்திகளை) நன்குணர்பவன்.