“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
IFT
“நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்கள்_”நாங்கள் விசுவாசங்கொண்டோம்” என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படவுமாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்களா?
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.
IFT
உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கின்றோம், ஆகவே, (விசுவாசங்கொண்டோம் என்று கூறும் இவர்களில்) உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான், (அவ்வாறே, இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான்.
அல்லது: தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது.
IFT
தீமைகளைச் செய்வோர், நம்மை மிகைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மிகவும் மோசமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, தீயவைகளைச் செய்கிறார்களே அவர்கள் நம்மை விட்டும் தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டார்களா? (அவ்வாறாயின் இதை பற்றி) அவர்கள் தீர்மானம் செய்தது மிகக்கெட்டது.
எவர் அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று நம்புகிறார்களோ அவர்கள் (அதற்காக நல்ல அமல்களைச் செய்து கொள்ளட்டும்); ஏனெனில் அல்லாஹ் (அதற்காகக் குறித்துள்ள) தவணை நிச்சயமாக வருவதாக இருக்கிறது; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்.
IFT
அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருப்பவர்கள் (தெரிந்துகொள்ள வேண்டும்:) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தே தீரும். மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய சந்திப்பை எவர் ஆதரவுவைக்கிறாரோ அவர் (அதற்கு வேண்டிய நல்ல காரியங்களைச் செய்துகொள்ளட்டும்), ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை வரக்கூடியதாகும், அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார்; நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன்.
IFT
எவன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அல்லாஹ்வுடைய வழியில்) எவர் ஜிஹாது (அறப்போர்) செய்கிறாரோ அவர் ஜிஹாது செய்வதெல்லாம் (அதன் பயனெல்லாம்) தனக்காகத்தான், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
IFT
மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்_ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் நீக்கிவிடுவோம், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூலியாகவும் கொடுப்போம்.
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
அப்துல் ஹமீது பாகவி
தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (எனினும், கடவுள் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவற்றை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படியாதே! என்னிடமே நீங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.
IFT
தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். ஆனால், எதை (அதாவது, எந்தக் கடவுள் எனக்கு இணையானது என்பதை) நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் (பெற்றோர்) உன்னை வற்புறுத்தினாலோ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே. என்னிடம்தான் நீங்கள் அனைவரும் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருந்தீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம், அன்றியும் எதைப் பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே!) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம், என்னிடமே உங்களின் மீளுதல் இருக்கிறது, அது சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?
IFT
மனிதர்களில் சிலர் உள்ளனர். “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டால் மக்கள் தரும் இந்தச் சோதனையை அல்லாஹ்வுடைய தண்டனை போன்று கருதிவிடுகின்றார்கள். ஆனால், உம்முடைய இறைவனிடமிருந்து வெற்றியும் உதவியும் வந்துவிடுமாயின், இவர்களே கூறுவார்கள், “திண்ணமாக நாங்கள் உங்களுடன்தானே இருந்தோம்” என்று! உலக மக்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனன்றோ?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் மனிதர்களில், “அல்லாஹ்வை நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம்” என்று கூறுகின்ற சிலர் இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் துன்புறுத்தப்பட்டால், மனிதர்களால் ஏற்படும் (அத்)துன்பத்தை, அல்லாஹ்வுடைய வேதனையைப் போலாக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்கின்றனர். உமதிரட்சகனிடமிருந்து (உங்களுக்கு) ஏதேனும் உதவி வந்து விட்டாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம்” என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.
IFT
மேலும், அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; நம்பிக்கை கொண்டவர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) விசுவாசங்கொண்டிருப்போரையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளையும், நிச்சயமாக அவன் நன்கறிவான்.
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
IFT
இந்நிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம் “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள்; உங்களுடைய பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களின் பாவங்களிலிருந்து சிறிதளவுகூட இவர்கள் சுமந்து கொள்ளக் கூடியவர்களல்லர். நிச்சயமாக இவர்கள் பொய் சொல்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போ(ரில்பல)ர் விசுவாசிகளிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள், (அதனால் ஏதும் குற்றம் ஏற்பட்டால்,) உங்களுடைய குற்றங்களையும் நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்றும் கூறுகின்றனர், அன்றியும், அவர்களுடைய குற்றங்களிலிருந்து எதனையுமே இவர்கள் சுமந்து கொள்பவர்களாக இல்லை_ நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.
IFT
ஆம்! இவர்கள் தங்களுடைய சுமைகளையும் சுமப்பார்கள்; தங்கள் சுமைகளுடன் வேறு பல சுமைகளையும் சுமப்பார்கள். மேலும், இவர்கள் புனைந்துரைக்கின்றவற்றைப் பற்றி மறுமை நாளில் திண்ணமாக விசாரிக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளையும் தம் (பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பாவச்) சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள், இன்னும் அவர்கள் இட்டுகட்டிகொண்டிருந்தவைகளைப் பற்றியும் நிச்சயமாக மறுமை நாளில் (விசாரித்துக்) கேட்கப்படுவார்கள்.
மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
IFT
நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமை புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபி) நூஹை (நம்முடைய தூதராக) அவருடைய சமூகத்தார்பால் திட்டமாக நாம் அனுப்பிவைத்தோம், அவர் ஐம்பது ஆண்டுகள் நீங்கலாக ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே தங்கியிருந்தார். பின்னர் அவர்கள் (விசுவாசங்கொள்ளாது) அநியாயக்காரர்களாக இருந்தநிலையில் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
IFT
மேலும், இப்ராஹீமை நாம் அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்றாஹீமையும் (நம்முடைய தூதராக அவருடைய ஜனங்களிடம் அனுப்பி வைத்த சமயத்தில்,) அவர், தன்னுடைய சமூகத்தார்க்கு “நீங்கள் அல்லாஹ்வை(யே) வணங்குங்கள், அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள், நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக்க நன்மையுடையதாக இருக்கும், (என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்)” என்று கூறியதை (நபியே! நினைவூட்டுவீராக!)
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்.
IFT
அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பூஜிப்பவை அனைத்தும் வெறும் சிலைகள்தாம்! மேலும், நீங்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வை விடுத்து யாரையெல்லாம் நீங்கள் வழிபடுகின்றீர்களோ அவர்கள் உண்மையில் உங்களுக்கு எந்த ஓர் உணவையும் அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. உணவை அல்லாஹ்விடமே கேளுங்கள். மேலும், அவனுக்கே அடிபணியுங்கள்; மேலும், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தவிர,) “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான், நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளைப்) படைத்துக்கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே தேடுங்கள். அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.
IFT
மேலும், நீங்கள் பொய்யென வாதிட்டால், உங்களுக்கு முன்னர் பல சமூகங்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றன. மேலும், தூதைத் தெளிவுற எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், நீங்கள் (என்னைப்) பொய்யக்கினால், (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினர் (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கியிருக்கின்றனர், (நம்) தூதரின் மீதோ பகிரங்கமாக எத்தி வைப்பதைத் தவிர (வேறு கடமை) இல்லை.
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்).
IFT
அல்லாஹ் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் படைப்பை எவ்வாறு ஆரம்பத்தில் (படைக்கத்) துவங்குகிறான், (அவை அழிந்த) பின்னர் அதனை (எவ்வாறு) மீள வைக்கிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து, அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!
“பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.
IFT
இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், அல்லாஹ் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பூமியில் சுற்றித்திரிந்து, படைப்பை எவ்வாறு (ஆரம்பத்தில்) அவன் துவங்கி, பின்னர் அல்லாஹ் மற்றொரு உற்பத்தியை (எவ்வாறு) உண்டு பண்ணுகிறான், என்பதைப் பாருங்கள், நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை.
IFT
பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியிலோ, இன்னும் வானத்திலோ நீங்கள் (ஒளிந்து கொண்டு, அவனைத் தோற்கடித்து) இயலாமல் ஆக்கிவிடுபவர்கள் அல்லர், மேலும் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு (வேறு) பாதுகாவலனுமில்லை, உதவி செய்வோனுமில்லை.
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.''
IFT
எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களையும் அவனை சந்திப்பதையும் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய அருளிலிருந்து நிராசை அடைந்துவிட்டிருக்கின்றார்கள். மேலும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடைய வசனங்களையும், அவனை சந்திப்பதையும் மறுக்கின்றனரே அத்தகையோர்_அவர்கள் என் கிருபையை விட்டும் நிராசையாகி விட்டனர், மேலும் அத்தகையோர்_அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
பிறகு, இப்ராஹீமுடைய சமூகத்தார் அளித்த பதில் இதைத் தவிர வேறு எதுவுமில்லை: “கொன்று விடுங்கள் அவரை; அல்லது எரித்து விடுங்கள் அவரை!” இறுதியில், அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டான். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இப்றாஹீமாகிய) அவரைக்கொன்றுவிடுங்கள், அல்லது (நெருப்பிலிட்டு) எரித்துவிடுங்கள்” என்று கூறியதைத்தவிர வேறு எதுவும் அவருடைய சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை, (அன்றியும் அவரை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே (அந்) நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை ஈடேற்றிக் கொண்டான், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு நிச்சயமாக இதில் (பல) சான்றுகள் இருக்கின்றன.
மேலும் (இப்ராஹீம்) சொன்னார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வையன்றி (சிலரை) வணக்கத்திற்குரியவர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டது (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர் கியாம நாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரை சபித்துக் கொள்வர்; (இறுதியில்), நீங்கள் ஒதுங்குந்தலம் (நரக) நெருப்புத்தான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்.
IFT
மேலும், அவர் கூறினார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை விடுத்து உருவச்சிலைகளை நீங்கள் உங்களிடையே அன்பு செலுத்துவதற்குச் சாதனமாக்கிக் கொண்டுள்ளீர்கள். ஆயினும், மறுமை நாளில் நீங்கள் ஒருவரையொருவர் மறுத்துரைத்து, ஒருவரையொருவர் சபித்துக் கொள்வீர்கள்! மேலும், நெருப்பு உங்களின் இருப்பிடமாக அமையும். உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் அல்லாஹ்வையன்றி (இந்த) விக்கிரகங்களை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் உள்ள நேசம் காரணமாகத்தான்; பின்னர், மறுமை நாளில் உங்களில் சிலர், சிலரை (விட்டும் நீங்கிக்கொண்டு) நிராகரிப்பர்; இன்னும் உங்களில் சிலர் சிலரை (நிந்தித்து) சபிப்பர்; (முடிவில்) உங்கள் (யாவரின்) தங்குமிடமும் (நரக) நெருப்புதான்; (அங்கு) உங்களுக்கு உதவி செய்வோர்களுமில்லை” என்றும் (இப்றாஹீம்) கூறினார்.
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்றாஹீம் அவரை நோக்கி) ‘‘ நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என் இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' என்று கூறினார்.
IFT
(அவ்வேளை) லூத் அவரை ஏற்றுக்கொண்டார். மேலும், இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் ஹிஜ்ரத்* செய்கின்றேன். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி மட்டும்) தான் அவரை விசுவாசித்தார். (ஆகவே, இப்றாஹீம் அவரிடம்) “நிச்சயமாக, நான் என் இரட்சகனின்பால் (என்னுடைய இந்த ஊரை விட்டும்) ஹிஜ்ரத்துச் செல்கிறேன், நிச்சயமாக அவன்தான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்று கூறினார்.
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்.
IFT
மேலும், நாம் அவருக்கு இஸ்ஹாக் மற்றும் யஃகூப் போன்ற பிள்ளைகளை வழங்கினோம். மேலும், அவருடைய வழித்தோன்றல்களுக்கு தூதுத்துவத்தையும் வேதத்தையும் வழங்கினோம். உலகில் அவருக்குரிய கூலியை அவருக்கு அளித்தோம். மேலும், மறுமையில் திண்ணமாக அவர் உத்தமர்களோடு இருப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்தோம்; இன்னும் அவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் நாம் ஆக்கினோம்;அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம்; இன்னும் நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லோரில் உள்ளவராவார்.
மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்.
IFT
மேலும், நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “உங்களுக்கு முன்னர் உலக மக்களில் யாரும் செய்திராத மானக்கேடான செயலை நீங்கள் செய்கின்றீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், லூத்தை (நம்முடைய தூதராக அவர் சமூகத்தாரிடம் அனுப்பிவைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் “மானக்கேடான (ஒரு காரியத்)தை, நிச்சயமாக நீங்கள் செய்கின்றீர்கள்; உலகத்தாரில் எவரும் அதைக்கொண்டு உங்களை முந்தவில்லை” என்று கூறியதை (நினைவூட்டுவீராக).
நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை.
IFT
என்னே உங்களின் இந்த நடத்தை! ஆண்களிடம் செல்கின்றீர்கள்; வழிப்பறி செய்கின்றீர்கள்; உங்கள் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்!” அவருடைய சமூகத்தாரிடம் இதைத் தவிர வேறெந்த பதிலும் இருக்கவில்லை: “கொண்டுவாரும் அல்லாஹ்வின் தண்டனையை, நீர் உண்மை யாளராயின்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (பெண்களை விட்டு,) ஆண்களிடம் (மோகங்கொண்டவர்களாக) வருகின்றீர்களா? (இத்தீய செயலைக் கொண்டு பிரயாணிகளை) வழிமறிக்கவும் செய்கின்றீர்கள், (ஜனங்கள் நிறைந்த) உங்கள் சபையிலும் (பகிரங்கமாகவே மிக்க) வெறுக்கத்தக்க (இக்காரியத்)தைச் செய்யவருகிறீர்கள்” (என்றும் கூறினார்), அதற்கு, “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டுவாரும்” என்பதைத் தவிர (வேறு எதுவும்) அவருடைய சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை.
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்களாகிய) நம் தூதர்கள், இப்றாஹீமுக்கு (இஸ்ஹாக் நபியின் பிறப்பைப் பற்றி) நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி ‘‘ லூத்துடைய) இந்த ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்துவிடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக்காரர்களாக ஆகிவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
IFT
மேலும், நம்முடைய தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தபோது, அவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் இவ்வூர் மக்களை அழிக்கப்போகின்றோம். ஏனெனில், இங்குள்ளவர்கள் பெரும் கொடுமை புரிபவர்களாகி விட்டார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய தூதர்கள் இப்றாஹீமிடம் நன்மாராயத்தைக் கொண்டு வந்த சமயத்தில், (அவரிடம், “லூத்துடைய) இந்த ஊர்வாசிகளை நிச்சயமாக நாங்கள் அழிக்கக் கூடியவர்களாக உள்ளோம், (ஏனென்றால்) நிச்சயமாக இவ்வூரைச் சேர்ந்தோர் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்ராஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு இப்ராஹீம், “அங்கு லூத் இருக்கின்றாரே!” என்றார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அங்கு யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். திண்ணமாக, அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “நிச்சயமாக அதில் லூத் இருக்கின்றாரே” என்று கூறினார், (அதற்கு) அவர்கள், அதில் யார் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நன்கறிவோம், அவருடைய மனைவியைத் தவிர அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் காப்பாற்றுவோம், (அவர் மனைவியாகிய) அவள் (அழிக்கப்படுவோரில் ஒருத்தியாக) தங்கி விடுகிறவர்களில் ஆகிவிட்டாள்” என்று கூறினார்கள்.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
IFT
பின்னர், நம்முடைய தூதர்கள் லூத்திடம் வந்தபோது அவர்களுடைய வருகையால் அவர் மிகவும் பதற்றமடையவும், மனம் நொந்துவிடவும் செய்தார். அவர்கள் கூறினார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நாம் உம்மையும் உம்முடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வோம்; உம்முடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நம்முடைய (அத்)தூதர்கள் (நபி) லூத்திடம் வந்த பொழுது அவர், (தம் ஜனங்களிடமிருந்து எவ்வாறு இவர்களைப் பாதுகாப்பது என்று) அவர்களால் துக்கத்திலாக்கபட்டார். மேலும், (அவர்களைக் காப்பதற்கு வழியறியாது) அவர்களால் மனதில் நெருக்கடிக்குள்ளானார், அ(தற்க)வர்கள் “நீர் அஞ்ச வேண்டாம், கவலையும்பட வேண்டாம், நிச்சயமாக நாங்கள் (இவ்வூரை அழித்துவிட்டு) உம்முடைய மனைவியைத் தவிர, உம்மையும், உமது குடும்பத்தினரையும் காப்பாற்றக்கூடியவர்களாக உள்ளோம், (உம் மனைவியாகிய) அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுகிறவர்களில் ஆகிவிட்டாள்” என்று கூறினார்கள்.
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைப்போம்'' (என்று கூறினார்கள்).
IFT
நாம் இவ்வூர் மக்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்குபவர்களாவோம்; இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீய செயல்களின் விளைவாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது இவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்பவர்களாக இருகின்றோம்” (என்றும் கூறினார்கள்).
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், வானவர்கள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்கள் இருந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறோம்.
IFT
நாம் அவ்வூரின் தெளிவான தொரு சான்றை விட்டு வைத்திருக்கின்றோம், அறிந்துகொள்ளக் கூடிய மக்களுக்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், அவர்கள் யாவரும் அழிக்கப்பட்டுவிட்டனர்.) திட்டமாக நாம், அறிவுடைய சமூகத்தாருக்கு அதிலிருந்தும் தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்திருக்கின்றோம்.
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்.
IFT
மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். இறுதிநாளை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். மேலும், பூமியில் அநீதி இழைத்துக்கொண்டு, குழப்பம் விளைவிப்பவர்களாய்த் திரியாதீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மத்யன் (வாசிகள்) பால் அவர்களுடைய சகோதரர் ஷூஐபை (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்); பின்னர் அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், (உங்கள் வழிபாட்டின் பலனைப் பெற) இறுதி நாளையும் ஆதரவு வையுங்கள்; பூமியில் விஷமம் செய்வோராகவும் அலையாதீர்கள்” என்று கூறினார்.
எனினும் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால் அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; ஆகவே, அவர்கள் தம் வீடுகளில் அதிகாலையில் (மரித்து) முகங்குப்புற விழுந்து கிடந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்.
IFT
ஆனால், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்கள் அவரைப் பொய்ப்படுத்தினார்கள், ஆதலால் பூகம்பம் அவர்களை பிடித்து கொண்டது, ஆகவே அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற வீழ்ந்து (இறந்து) கிடந்தவர்களாக காலைப் பொழுதை அடைந்தனர்.
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும் அழித்தோம்); அன்றியும் அவர்கள் வசித்த இடங்களிலிருந்து (ஒரு சில சின்னங்கள்) உங்களுக்குத் தெளிவாக தென்படுகின்றன; ஏனெனில் ஷைத்தான் அவர்களுடைய (தீச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)
IFT
மேலும், ஆத், ஸமூத் இனத்தார்களையும் நாம் அழித்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். மேலும், அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காண்பித்தான். மேலும், அவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாய் இருந்தும்கூட, அவன் நேர்வழியினின்று அவர்களைப் பிறழச் செய்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஆதையும், ஸமூதையும் (இவ்வாறே நாம் அழித்து விட்டோம்); அவர்கள் வாழ்ந்திருந்த இடங்(களில் உள்ள சின்னங்)களிலிருந்து, (அவர்கள் அடைந்த முடிவு) உங்களுக்குத் திட்டமாக தெளிவாகிவிட்டது. அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாக்கியும் காண்பித்தான்; ஆகவே, அவர்கள் நல்லறிவுடையோர்களாக இருந்தும் (நேர்) வழியை விட்டும் அவன் அவர்களைத் தடுத்துவிட்டான்.
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
அப்துல் ஹமீது பாகவி
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
IFT
மேலும், காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் நாம் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆயினும், அவர்கள் பூமியில் தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். உண்மையில், அவர்கள் வென்றுவிடுபவர்களாய் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காரூனையும், ஃபிர் அவ்னையும், ஹாமானையும் (நாம் அழித்து விட்டோம்), நிச்சயமாக மூஸா, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருந்தார், பின்னர் அவர்கள் (அவரை நிராகரித்து விட்டு,) பூமியில் பெருமை கொண்டு நடந்தனர், (அதனால் நம் வேதனையிலிருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்பவர்களாகவும் இருக்கவில்லை.
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
இறுதியில், ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்துவிட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்துவிட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (அவர்கள்) ஒவ்வொருவரையும், அவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்துக்கொண்டோம், அவர்களில் எவர் மீது (கடும்புயல்காற்றின் மூலமாக) நாம் கல்மாரியை அனுப்பினோமோ அவர்களும் உள்ளனர், மேலும், அவர்களில் எவரைப் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டதோ அவர்களும் உள்ளனர், இன்னும், அவர்களில் (காரூன் போன்று) எவரைப் பூமிக்குள் நாம் அழுந்தச் செய்துவிட்டோமோ அவர்களும் உள்ளனர், மேலும், அவர்களில் (ஃபிர் அவ்ன், ஹாமான் போன்று கடலில்) நாம் மூழ்கடித்தவர்களும் உள்ளனர், அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை, எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் இழைத்துக் கொள்பவர்களாக இருந்தனர்.
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
IFT
எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்து கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும்; அது ஒரு வீட்டை எடுத்து கொண்டது, இன்னும், நிச்சயமாக வீடுகளில் மிகப்பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும்; (இதை) அவர்கள் அறிவார்களாயின் (தாங்கள் அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டதன் தீமையை அறிவர்.)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனையன்றி அவர்கள் எதனை அழைக்கின்றார்களோ, அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிவான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
IFT
மக்கள் புரிந்துகொள்வதற்காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞானமுடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்துகொள்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வுதாரணங்கள் _மனிதர்களுக்காக இவற்றை நாம் கூறுகிறோம், (சிந்தித்தறியக்கூடிய) அறிவுடையவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனை விளங்கிக்கொள்ளவுமாட்டார்கள்.
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
IFT
(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! குர் ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக, தொழுகையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவு கூருவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரியதாகும், இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்.
இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்!
IFT
மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுள் கொடுமையாளர்களிடம் தவிர! மேலும், அவர்களிடம் கூறுங்கள்: “எங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே! மேலும், நாம் அவனுக்கே கீழ்ப்படிந்தவர்களாய் (முஸ்லிம்களாய்) இருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) நீங்கள் வேதத்தையுடையோர்களுடன் எது மிக அழகானதோ அதைக்கொண்டல்லாது (அவர்களுடன்) தர்க்கிக்க வேண்டாம், (ஆயினும்,) அவர்களில் அநியாயம் செய்தோர் தவிர (அவர்களுடன் தர்க்கித்தால்,) “எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம், எங்கள் வணக்கத்திற்குரியவனும், உங்கள் வணக்கத்திற்குரியவனும் ஒருவனே, மேலும், நாங்கள் அவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து நடக்கின்றவர்கள்” என்று கூறுங்கள்.
இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
IFT
(நபியே!) இதே போன்று உமக்கும் வேதத்தை இறக்கியருளியிருக்கின்றோம். ஆகையால், முன்னர் எவர்களுக்கு வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் இதனை நம்புகின்றார்கள். இவர்களிலும்கூட பெரும்பாலோர் இதன்மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமே நம்முடைய வசனங்களை மறுக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! முந்திய தூதர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே, நாம் உம்பால் (இவ்)வேதத்தை இறக்கியிருக்கின்றோம், ஆகவே, நாம் அவர்களுக்கு (முன்னர்) வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அத்தகையோர்_அவர்கள், இ(வ்வேதத்)தை விசுவாசிப்பார்கள், (மக்காவாசிகளாகிய) இவர்களிலும் இதனை (நம்பி) விசுவாசிப்பவர்களும் உள்ளனர், மேலும் காஃபிர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்கமாட்டர்கள்.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.
IFT
(நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் படித்ததில்லை. உம்முடைய கையால் எழுதியதுமில்லை. அவ்வாறிருந்திருந்தால் அசத்தியவாதிகள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் ஓதுபவராக இருக்கவில்லை, உமது வலக்கையால் நீர் அதனை எழுதுபவராக (இருக்க)வும் இல்லை. (அவ்வாறு இருந்திருக்குமானால்,) அப்பொழுது இப்பொய்யர்கள் (அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று) திடமாக சந்தேகம் கொண்டிருப்பர்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
IFT
உண்மையில் இவை ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றன. நம்முடைய வசனங்களை எவரும் மறுப்பதில்லை கொடுமைக்காரர்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறல்ல! (குர் ஆனாகிய) இது அறிவு கொடுக்கப்பட்டிருகிறார்களே அவர்களின் இதயங்களின் (பதியத்தக்க) தெளிவான வசனங்களாகும், மேலும், அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
“அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.''
IFT
இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவருடைய இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகள் அவரின் மீது இறக்கப்படவேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அதற்கு (நபியே!) “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் உள்ளன, (என்னிடமில்லை.) நானோ பகிரங்கமாக (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறவன்தான்” என்று கூறுவீராக!
அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.
IFT
அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கி வைத்து (அது) அவர்கள் மீது ஓதப்பட்டு வருவது அவர்களுக்குப் போதாதா? (ஏனென்றால்,) நிச்சயமாக அதில், (அல்லாஹ்வுடைய) அருளும், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு ஒரு நினைவூட்டலும் இருக்கின்றன.
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.''
IFT
(நபியே!) நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சி அளிக்க அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிகின்றான். எவர்கள் அசத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்களோ மேலும், அல்லாஹ்வை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்கு உரியவர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறும்: எனக்கும், உங்களுக்குமிடையில் சாட்சியாக (இருக்க) அல்லாஹ்வே போதுமானவன், (ஏனென்றால்,) வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் நன்கு அறிவான், பொய்யை விசுவாசங்கொண்டு, அல்லாஹ்வை நிராகரித்தும் விடுகின்றார்களே அத்தகையோர்_அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.
இன்னும், (மறுமையின்) வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்; எனினும் (அத்தவணையை) அவர்கள் உணர்ந்தறிய முடியாதிருக்கும் நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து திடீரென்று வந்து சேரும்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.
IFT
விரைவில் வேதனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் இவர்கள் கோருகின்றார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படாதிருந்தால் அவர்கள்மீது வேதனை வந்துவிட்டிருக்கும். மேலும், திண்ணமாக, அது (உரிய நேரத்தில்) அவர்களிடம் திடீரென வந்தே தீரும். அதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மறுமையின்) வேதனையைப்பற்றி, (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மை அவசரப்படுத்துகின்றனர்; இன்னும், ஒரு குறிப்பிட்ட தவணையில்லாதிருந்தால் அ(வ்வேதனையான)து அவர்களை வந்தடைந்திருக்கும்; இன்னும், (அத்தவணை) அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில், அது திடீரென அவர்களிடம் திட்டமாக வந்துவிடும்.
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
IFT
வேதனையை விரைவில் கொண்டு வருமாறு இவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். அதே நேரத்தில் நரகம் இந்நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (அவ்) வேதனையைப்பற்றி உம்மை அவசரப்படுத்துகின்றனர், நிச்சயமாக நரகமோ நிராகரிப்போரைச் சூழ்ந்து கொள்ளக்கூடியதாகும்.
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் அவர்களை மூடிக் கொள்ளும். (அப்போது இறைவன்) “நீங்கள் செய்து கொண்டிருந்த(தின் பய)னைச் சுவைத்துப் பாருங்கள்“ என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.
IFT
மேலும், அந்நாளை (இவர்கள் அறிந்து கொள்வார்கள்) அன்று வேதனை இவர்களின் மேலிருந்தும், இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். மேலும், கூறுவான்: “இப்பொழுது சுவையுங்கள், நீங்கள் செய்து கொண்டிருந்த இழிசெயல்களின் விளைவை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் (அந்) நாளில், “நீங்கள் செய்து கொண்டிருந்ததை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்” என்றும் (அல்லாஹ்வாகிய) அவன் கூறுவான்.
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.)
IFT
நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! திண்ணமாக, என்னுடைய பூமி விசாலமானது. எனவே, எனக்கே நீங்கள் அடிபணியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி (மிக்க) விசாலமானது, எனவே (அதில்) நீங்கள் என்னையே வணங்குங்கள்.
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சொர்க்கங்களிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருக்கின்றார்களோ, அவர்களை சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் வசிக்கச் செய்வோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கே அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். நற்செயல் புரிபவர்களுக்குரிய இக்கூலி எத்துணைச் சிறப்பானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்_அவர்களைச் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில் (அவர்கள் தங்கி விடுவதற்காக) திட்டமாக நாம் இறக்குவோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், (நன்மையான) செயல் புரிவோரின் கூலி நல்லதாகிவிட்டது.
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான். உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எத்தனையோ பிராணிகள்_அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை, அல்லாஹ்தான் அவைகளுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான், (இவ்வாறிருக்க, அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்?) அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.
IFT
வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருப்பவனும் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் திண்ணமாக, இவர்கள் ‘அல்லாஹ்’ என்று பதில் தருவார்கள். பிறகு, இவர்கள் எங்கிருந்து ஏமாற்றப்படுகின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “வானங்களையும் பூமியையும் படைத்து, சூரியனையும், சந்திரனையும் (தன் திட்டப்பிராகரமே நடக்கும் படி) வசப்படுத்தியவன் யார்?” என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; அவ்வாறாயின், அவர்கள் (அவனை வணங்குவதை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறார்கள்?.
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்.”
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
அல்லாஹ் தன்னுடைய அடிமைகளில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாய் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு அளவோடு வழங்குகின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களுக்கு (வாழ்க்கை வசதிகளுக்குத் தேவையான) உணவை விரிவாகவும் கொடுக்கிறான், (தான் நாடியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கிறான், நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளையும் (பற்றி) நன்கறிந்தவன்.
இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அதற்கு, ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) உணர்ந்து கொள்வதில்லை.
IFT
மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் இறந்துகிடக்கின்ற பூமியை உயிர்ப்புறச் செய்தவன் யார்? என்று இவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று திண்ணமாக அவர்கள் பதில் சொல்வார்கள். ‘அல்ஹம்துலில்லாஹ்’ புகழ் அனைத்தும் இறைவனுக்கு உரியது என்று கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) “வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைக் கொண்டு பூமியை_அது இறந்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ”அல்லாஹ்” என்று அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள், (அதற்கு) “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று நீர் கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
IFT
மேலும், இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் அறிந்தவர்களாக இருப்பின் நிச்சயமாக மறுமையின் வீடு, அதுவே (நித்திய) வாழ்க்கையாகும்.
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.
IFT
இந்த மக்கள் கப்பலில் பயணமாகும்போது தங்களுடைய தீனைமார்க்கத்தை அல்லாஹ்வுக்கு உரித்தாக்கிய வண்ணம் அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் அவனுக்கு இணை வைக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் கப்பலில் ஏறி(ய பின் ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அல்லாஹ்வை அழைக்கின்றனர், அவன் அவர்களைக் கரையின் பால் (சேர்த்து வைத்துக்) காப்பாற்றிய பொழுது, அவனுக்கே அவர்கள் இணைவைக்கின்றனர்.
அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
IFT
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஈடேற்றத்திற்கு நன்றி கொல்வதற்காகவும் உலக வாழ்க்கையின் இன்பத்தை அவர்கள் அனுபவிப்பதற்காகவும்தான்! சரி, விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களுக்கு அருளியதை அவர்கள் நிராகரிப்பதற்காகவும் (தங்கள் விருப்பப்படி) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டிருப்பதற்காகவும் (இணை வைக்கின்றனர்.) ஆனால் அவர்கள் (இதன் பலனை) விரைவில் தெரிந்து கொள்வார்கள்.
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?
IFT
இவர்களின் அக்கம்பக்கங்களில் இருக்கும் மக்கள் இறாஞ்சிச் செல்லப்படும் நிலையில் இருக்க ஹரமை நாம் அபயமளிக்கும் புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகு என்ன, இவர்கள் அசத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி கொல்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களைச் சூழ (மக்காவிற்கு வெளியில்) உள்ள மனிதர்கள் எதிரிகளால் இறாய்ஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படும் நிலையில் (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இவர்கள் பொய்யை விசுவாசங்கொண்டு, அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையையும் நிராகரிக்கின்றனர்.
அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடம் நரகத்தில் இல்லையா?.
IFT
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தன் முன் சத்தியம் வந்திருக்கும்போது அதைப் பொய்யென வாதிட்டவனைவிடப் பெரும் கொடுமைக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகம் இருப்பிடமல்லவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனைச் செய்தவனை விட, அல்லது சத்தியத்தை_ அது, தன்னிடம் வந்தபோது_ பொய்யாக்கியவனை விட மிக்க அக்கிரமக்காரன் யார்? (இத்தகைய) நிராகரிப்போரின் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
IFT
மேலும், எவர்கள் நமக்காக ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். மேலும், திண்ணமாக, அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக்கின்றார்களே அத்தகையோர்_நிச்சயமாக நாம் அவர்களை, நம்முடைய (நேரான) வழியில் செலுத்துகின்றோம், மேலும் நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோர்களுடன் இருக்கிறான்.