ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மிகப்பெரிய சேவைகளில் ஒன்றாக இந்த இரு நூல்களையும் நாம் சொல்லலாம். ஆரம்ப காலத்தில் மக்களிடம் பிரபல்யமாக இருந்த பலகீனமான ஹதீஸ்களைத் தொகுத்து, அதனை மக்களுக்கு அடையாளப்படுத்தி, அதனால் உருவான பித்அத்துகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற நோக்கில் 'ஸில்ஸிலதுல் அஹாதீஸித் ழயீஃபா' என்ற பலகீனமான ஹதீஸ்களின் தொகுப்பை எழுதினார். இது 14 பாகங்கள் வரை நீண்டு, சுமார் 6000-க்கும் மேற்பட்ட பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பலகீனமானவற்றை மட்டும் சுட்டிக்காட்டினால் போதாது, ஸஹீஹான ஹதீஸ்களையும் எழுத வேண்டும் என்ற அடிப்படையில் 'ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹா' என்ற ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பை எழுதினார். இது 7 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 3500 ஹதீஸ்களுடன் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு நூல்களுமே ஹதீஸ்களைத் தரம்பிரிப்பதிலும், அவற்றுக்கான மறுப்புகளைத் தெளிவுபடுத்துவதிலும், அதிலிருந்து பெறப்படும் மார்க்க சட்டங்களைப் படிப்பதற்கும் மிகச் சிறந்தவைகளாகும்.
முஸ்தபா இஸ்மாயில் போன்ற சில ஹதீஸ் கலை அறிஞர்கள், ஷேக் அல்பானியுடைய 'ழயீஃபா' நூலின் ஆய்வு முறைமை 'ஸஹீஹா' நூலை விட மிகவும் பலமானது என்று குறிப்பிடுகின்றனர். நான் ஹதீஸ் சம்பந்தமாக ஒரு ஆய்வு செய்தபோது, சஹீஹாவில் அவர் ஹஸன் தரத்தில் சொல்லக்கூடிய சில அறிவிப்பாளர்களை, ழயீஃபாவில் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தி மிகவும் பலகீனமானவர் என்று கூறியிருப்பதைக் கண்டேன். சில அடிப்படைகளை ஸஹீஹாவில் ஏற்றுக்கொண்டு, ழயீஃபாவில் அதை பலகீனப்படுத்துவதையும் அவதானிக்க முடிந்தது. எனவே, ழயீஃபாவுடைய ஆய்வு மிகவும் பலமானது.
ஆயினும், ஸில்ஸிலதுல் அஹாதீஸிஸ் ஸஹீஹாவை பொறுத்தவரை 90 சதவீதத்திற்கும் மேல் அதை ஒரு சிறந்த ஆதாரப்பூர்வமான ஆய்வு முறைமையாக நாம் கொள்ளலாம். மீதமுள்ள 10 சதவீதத்தில் அறிஞர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஷேக் அல்பானி அவர்கள் ஹஸன் என்று சொன்னால் பலகீனமாக இருப்பார், ழயீப் என்று சொன்னால் பலமாக இருப்பார் என்றெல்லாம் கூறுவது தவறான வாதமாகும். எனவே, ஒரு பொதுமகன் இந்த இரண்டு நூல்களையும் 90 சதவீதத்திற்கும் மேல் உறுதியான ஆதாரமாகக் கொள்வதில் எவ்வித சந்தேகமுமில்லை.