ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பைத்துல் மால் அமைப்பதன் மார்க்கச் சட்டம் என்ன? அதை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? ஜகாத் பணத்தை எவ்வாறு கையாள வேண்டும்?

பைத்துல் மால் ஜகாத் ஸதக்கா ஏழைகள்

← முந்தையஅடுதது →
கேள்வி
பைத்துல் மால் அமைப்பதன் மார்க்கச் சட்டம் என்ன? அதை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? ஜகாத் பணத்தை எவ்வாறு கையாள வேண்டும்?
பதில்
பதில்:

பைத்துல் மால் (பணத்தின் வீடு / இஸ்லாமிய கருவூலம்) என்பது ரசூல் (ஸல்) காலத்திலும், இஸ்லாமிய ஆட்சியிலும் பள்ளியை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஒரு அமைப்பாகும். இஸ்லாமிய ஆட்சியில் பொது தர்மங்கள், ஜகாத், கனிமத் (போர்ப்பொருள்), வாரிசு இல்லாத சொத்துக்கள், ஜகாத்துல் பித்ர் என அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டு தனித்தனியாக நிர்வகிக்கப்படும். ஜகாத் நிதியை ஸதக்காவிலோ, ஸதக்காவை ஜகாத்திலோ கலக்கக் கூடாது; யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அங்கிருந்துதான் கொடுக்க வேண்டும்.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஊர்களில், ஊருக்கு ஒரு பைத்துல் மால் அமைத்து, மக்களைக் கட்டாயப்படுத்தி பணத்தைச் சேர்க்கச் சொல்வதற்கு எவருக்கும் மார்க்க ரீதியான அதிகாரம் கிடையாது. எனினும் ஊர் மக்கள் மனமுவந்து (Volunteers ஆக) இதை நடத்தினால் அதில் ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய மார்க்கச் சட்டங்கள் பின்வருமாறு:

1. மானம் மரியாதையைப் பேணுதல்:
உதவி கேட்டு வருபவர்களின் மானம், மரியாதையைப் பாதுகாக்கக் கூடியவர்களாக நிர்வாகிகள் இருக்க வேண்டும். உதவி கேட்டு வருபவர்களின் புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிடுவதோ, கணக்குக் காட்டுகிறோம் என்று பயனாளிகளின் ரகசியங்களை வெளியிடுவதோ கூடாது. சுய கௌரவம் பார்ப்பவர்கள் இத்தகைய இடங்களுக்கு வரமாட்டார்கள்; இதனால் உண்மையான ஏழைகளுக்கு ஜகாத் சென்றடையாமல் போய்விடும்.

2. ஆடம்பரக் கட்டடங்கள் வாங்குவது ஹராம்:
பைத்துல் மாலுக்காகவும், ஜமாஅத்துக்காகவும் பெரிய கட்டடங்களை ஜகாத் பணத்தில் கோடிக்கணக்கில் கொட்டி வாங்குவது மிகப் பெரிய அநீதியாகும். எவ்வளவுக்குத் தேவையோ, அவ்வளவோடு செலவை முடித்துக் கொள்ள வேண்டும். பைத்துல் மாலின் நிர்வாகச் செலவுகளுக்கு ஸதக்கா நிதியையோ அல்லது சொந்தப் பணத்தையோதான் (Volunteers ஆக) பயன்படுத்த வேண்டும்.

3. ஆமிலீன் (வசூலிப்போர்) கமிஷன் எடுக்கக் கூடாது:
ஜகாத் வசூலிப்பவர்களுக்கு (ஆமிலீன் அலைஹா) ஜகாத் நிதியிலிருந்து ஒரு பங்கு எடுக்கலாம் என்பது இஸ்லாமிய ஆட்சியில் அரசு நியமிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே உரியதாகும். இன்று ஜமாஅத்துகள் ஆமிலீன் என்ற பெயரில் 50 லட்சம் வசூலித்து 10 லட்சத்தை கமிஷனாக எடுப்பது மார்க்கத்தில் கூடாது. தாமாக முன்வந்து வசூலிக்கும் வாலண்டியர்கள் கமிஷன் எடுக்கக் கூடாது.

4. ஜகாத் நிதியைப் பணமாகவே கொடுக்க வேண்டும்:
ஜகாத் நிதியைப் பணமாக வசூலித்தால், பணமாகவே பயனாளியிடம் ஒப்படைக்க வேண்டும். நிர்வாகிகளாக நாமே முடிவு செய்து அதைப் பள்ளியின் பெயரில் நிலமாகவோ அல்லது தையல் மெஷினாகவோ மாற்றிக் கொடுக்கக் கூடாது (ஸதக்காவாக இருந்தால் அப்படிப் பொருளாகக் கொடுக்கலாம்). ஏழைகளின் பணத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்களது தேவையை அவர்களை விட்டே தீர்மானிக்கச் செய்ய வேண்டும்.

5. வட்டியில்லா சிறு கடன்களுக்கு ஜகாத் நிதியைப் பயன்படுத்தலாமா?
ஏழைகளுக்குச் சிறு கடன்கள் (வட்டியில்லா கடன்) கொடுத்து உதவுவதற்கு ஸதக்கா நிதியைப் பயன்படுத்தலாமே தவிர ஜகாத் நிதியைப் பயன்படுத்தக் கூடாது. அந்த வருடத்தின் ஜகாத் அந்த வருடத்திலேயே முழுமையாக ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டு விட வேண்டும். ஜகாத் நிதியைப் பெறுவதற்கு ஊரில் யாருமே இல்லை என்ற நிலை வரும்போது வேண்டுமானால், திருப்பிச் செலுத்த முடியாத கடனாளிகளுக்கு அதிலிருந்து கொடுத்துக் கழிக்கலாம்.

← முந்தையஅடுதது →