குர்ஆனில் "நல்லவர்களுக்கு நல்லவர்கள், கெட்டவர்களுக்கு கெட்டவர்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். கத்ர் (விதி) ரீதியாகப் பார்த்தால், நாம் மார்க்கப்பற்றோடு வாழ்ந்தால் நமக்கும் பெரும்பாலும் அப்படித்தான் துணையும் அமைவார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். நல்ல முறையில் வாழ்ந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.
ஆனால், எல்லா நிலையிலும் 100 சதவீதம் இப்படித்தான் அமையும் என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம், இந்த உலகம் ஒரு சோதனைக் கூடமாகும். அல்லாஹ் இதற்கு விதிவிலக்கான சில சோதனைகளையும் வைப்பான். நூஹ் (அலை), லூத் (அலை) ஆகியோரின் மனைவியர் காஃபிர்களாகவும் மோசமானவர்களாகவும் அமைந்ததையும், அநியாயக்காரனான ஃபிர்அவ்னின் மனைவி மிகச் சிறந்த பெண்ணாக அமைந்ததையும் வரலாற்றில் பார்க்கிறோம். இதுபோல நல்லவர்களுக்கு ஒழுக்கமற்ற துணையும், கெட்டவர்களுக்கு ஒழுக்கமான துணையும் சிலவேளை அமையலாம்.
இருப்பினும், நாம் மார்க்கப் பற்றுடன் வாழ்ந்து அதற்கேற்ப துணையைத் தேர்ந்தெடுத்தால் பெரும்பாலும் நல்ல துணை அமையும் என்பதே பொதுவான விதி. எனவே, தேவையில்லாமல் "நான் மோசமானவனோ அதனால் என் மனைவி மோசமாக அமைவாளோ" என்று துணையை சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, நமது வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக் கொண்டால் அது மனதுக்கு நிம்மதியான வாழ்க்கையைத் தரும்.