ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மணமகன் தனது சக்திக்கு உட்பட்டு ஊர் மக்களுக்கு திருமண விருந்து (வலீமா) அளித்தால் அது ஆடம்பரத் திருமணம் ஆகுமா?

வலீமா திருமணம் விருந்து வீண்விரயம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மணமகன் தனது சக்திக்கு உட்பட்டு ஊர் மக்களுக்கு திருமண விருந்து (வலீமா) அளித்தால் அது ஆடம்பரத் திருமணம் ஆகுமா?
பதில்
பதில்:

திருமண விருந்து மட்டுமல்ல, எந்தவொரு உலக விஷயத்திலும் வீண்விரயங்கள் மற்றும் ஆடம்பரங்களை இஸ்லாம் வன்மையாகத் தடுக்கிறது. "உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் வீண்விரயம் செய்ய வேண்டாம்" என்றும் "வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்" என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது.

வீண்விரயம் என்றால் என்ன?
தேவையில்லாமல், அளவுக்கு அதிகமாக, பொருத்தமில்லாமல் செலவுகளைச் செய்வதுதான் வீண்விரயம். ஒருவர் 100 பேருக்கு உணவு கொடுக்க வசதி இருந்து அதைக் கொடுத்தால் அது வீண்விரயம் அல்ல. ஆனால் 100 பேர் சாப்பிடக் கூடிய இடத்தில் ஆயிரம் பேருக்கான உணவை வைத்து பெருமையடிப்பது வீண்விரயமாகும். சாதாரணமான அழகிய இடத்தில் உணவு கொடுக்கலாம்; ஆனால் தனது கௌரவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தொகை கொடுத்து ஆடம்பரமான இடத்தைப் பதிவு செய்வது வீண்விரயமாகும்.

ஒருவருக்கு 50 ரூபாய்க்கு சட்டை வாங்க வசதி இருக்கும், இன்னொருவருக்கு 50,000 ரூபாய்க்கு வாங்க வசதி இருக்கும். 50,000 ரூபாய்க்கு வாங்க வசதியுள்ளவர் அதை வாங்குவது வீண்விரயம் அல்ல. ஆனால் 5000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சட்டையை, பெருமைக்காக வேண்டி 50,000 கொடுத்து வாங்கினால் அவர்தான் வீண்விரயம் செய்கிறார்.

திருமண விருந்தில் அளவுகோல்:
தனது வசதிக்கு ஏற்ப எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வலீமா கொடுக்கலாம். ஒருவரிடம் வசதியிருந்தால் 1000, 2000, அல்லது 3000 பேருக்குக் கூட உணவளிக்கலாம். ரசூல் (ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களுக்கு வலீமா கொடுத்த போது, சந்திக்கிற அனைவரையும் அழைக்கச் சொன்னார்கள், அதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். எனவே வசதி இருப்பவர் தாராளமாக உணவளிப்பதில் எவ்விதத் தடையுமில்லை.

"பரக்கத்தான திருமணம் என்பது செலவால் குறைந்தது" என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது இல்லை என்றாலும், ஹராமான செலவுகளைக் குறைத்து, உணவு போன்ற தேவையான விஷயங்களில் செலவழித்தால் அதிலும் பரக்கத் உண்டு என்று நாம் புரிந்து கொள்ளலாம். எனவே வசதியிருப்பவர்கள் தாராளமாக தமது சக்திக்குட்பட்டு வலீமா வழங்குவது ஆடம்பரம் ஆகாது.

← முந்தையஅடுதது →