குர்ஆன் நேரடியாக மனைவியுடைய பங்கை (ஃபர்ளை) மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. கணவனுக்குப் பிள்ளை இருந்தால் அவனது சொத்தில் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு (1/8) போய்ச் சேரும். கணவனுக்குப் பிள்ளை இல்லை என்று சொன்னால் நான்கில் ஒரு பங்கு (1/4 - ருபுஉ) கணவனுடைய சொத்திலிருந்து மனைவிக்குப் போய்ச் சேரும். இந்த பிள்ளை எந்த மனைவி மூலம் கிடைத்த பிள்ளையாக இருந்தாலும் சரி, வேறு மனைவிகள் மூலம் கிடைத்த பிள்ளையாக இருந்தாலும் சரி, கணவனுக்குப் பிள்ளை இருந்துவிட்டால் மனைவியருக்கு எட்டில் ஒரு பங்குதான் கிடைக்கும்.
இரண்டு மனைவியராகவோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களாவோ இருந்தால், அவர்கள் அந்த எட்டில் ஒரு பங்கிலோ அல்லது நான்கில் ஒரு பங்கிலோ கூட்டாகப் பங்கிட்டு (ஷுரகா) சமமாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவருடைய சொத்தின் எட்டில் ஒரு பங்கு என்பது 4 லட்சம் என்று வைத்துக்கொண்டால், நான்கு மனைவிமார் இருந்தால் அது ஆளுக்கு ஒரு லட்சமாகப் பிரிந்துவிடும். மனைவிகள் அதிகரிக்க அதிகரிக்க, சொத்தில் அந்த குறிப்பிட்ட எட்டில் ஒன்று அல்லது நான்கில் ஒன்று என்ற பாகத்தில்தான் அவர்கள் பங்குதாரர்களாக மாறுவார்களே தவிர, தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் எட்டு/நான்கில் ஒரு பங்கு கிடைக்காது. அந்த 4 லட்சமே நாலு மனைவியருக்கும் ஆளுக்கு ஒரு லட்சமாகப் போய்ச் சேரும். இப்படித்தான் பாகங்களை மனைவிமார்களுக்கு இடையில் பிரித்துக் கொள்ள வேண்டும்.