ஆண்கள் கைகளிலோ கால்களிலோ மருதாணி இடுவது மார்க்கத்தில் ஹராமான (தடுக்கப்பட்ட) ஒரு செயலாகும். மருதாணி இடுதல் என்பது பெண்களுக்கே உரிய ஒரு அடையாள அம்சமாகும். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள், பெண்களைப் போன்று நடக்கக்கூடிய ஆண்களையும், ஆண்களைப் போன்று நடக்கக்கூடிய பெண்களையும் சபித்தார்கள் என்ற தடைக்குள் இது வந்துவிடும்.
ஆனால், தலையில் உள்ள பழுத்த (நரைத்த) முடிகளைப் பொறுத்தவரைக்கும் மருதாணியின் மூலம் அதனை மாற்றுவதற்கு மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கறுப்பு நிற டை (Dye) அடித்து மாற்றாமல், வேறு நிறங்களில் (உதாரணமாக மருதாணி) முடிகளை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி இருக்கக்கூடிய செய்திகளை நாம் பார்க்கிறோம். இது நரை முடிகளை மாற்றுவதற்குரிய அனுமதியே தவிர, கைகால்களில் மருதாணி இடுவது ஆண்களுக்குச் சபிக்கப்பட்ட செயலாகும்.
ஆண்கள் மருதாணி இடுவது குறித்து ஒரு பலகீனமான செய்தி சொல்லப்படுவதுண்டு. முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் ஆகிய கிரந்தங்களில் அன்னை ஆயிஷா (ரழி) அறிவிப்பதாக ஒரு செய்தி வருகிறது: ரசூல் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் திரைக்குப் பின்னாலிருந்து ஒரு கடிதத்தை நீட்டினார். ரசூலுல்லாஹ் அதனை எடுக்காமல், "இது ஒரு பெண்ணுடைய கையா, அல்லது ஆணுடைய கையா என்று எனக்குத் தெரியவில்லையே" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் "இது ஒரு பெண்ணுடைய கைதான்" என்றவுடன், ரசூலுல்லாஹ் "நீ ஒரு பெண்ணாக இருந்தால் உன்னுடைய நகங்களில் மருதாணி இட்டிருப்பாயே" என்று சொன்னதாக அச்செய்தி கூறுகிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசமாக மருதாணியைக் காட்டுகிறது.
ஆனால், இந்தச் செய்தி பலகீனமான (ழயீஃப்) செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முத்தி இப்னு மைமூனல் அம்பரி என்பவர் வருகிறார். அவர் யார் என்றே அறியப்படாத (மஜ்ஹூல்) ஒரு அறிவிப்பாளர் ஆவார். அதேபோல ரசூல் (ஸல்) அவர்கள் ஹிந்தா (ரழி) அவர்களிடம் பைஅத் எடுக்க வந்த போது, "கையை மாற்றுங்கள், மருதாணி இட்டு வாருங்கள்" என்று சொன்னதாக வரக்கூடிய செய்திகளும் பலகீனமானவைகளே.
இருந்தாலும், பெண்கள் மருதாணி இடுவது என்பது பெண்களுக்குரிய ஒரு அறியப்பட்ட (மஃரூஃப்) அம்சமாகும். எனவே, ஆண்கள் இதைப் பயன்படுத்துவது பெண்களுக்கு ஒப்பான செயல் என்ற அடிப்படையில் சாபத்திற்குரியதாகும். ஆண்கள் முற்றுமுழுதாக இதனைத் தவிர்க்க வேண்டும்.