வீடுகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது சம்பந்தமாக மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை. ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உமைர் என்ற நபித்தோழரைப் பார்த்து, "உங்களது குருவிக்கு என்ன ஆனது?" என்று கேட்டார்கள். அவர் அந்த குருவியை எடுத்து வளர்த்து வந்தார்; அது இறந்துவிட்ட கவலையில் இருந்ததை அறிந்தே நபிகளார் இவ்வாறு விசாரித்தார்கள். இதிலிருந்து மிருகங்களையோ பறவைகளையோ வீடுகளில் வைத்து வளர்ப்பதில் தவறு கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், அவ்வாறு வளர்க்கும் போது அவைகளுக்கு முறையான உணவளித்துப் பராமரிப்பது அவசியமாகும். ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பற்றிக் கூறும்போது, "ஒரு பூனையைக் கட்டி வைத்து உணவு கொடுக்காமலும், அது வெளியே சென்று சாப்பிடுவதற்கு அவிழ்த்து விடாமலும் இருந்ததனால் ஒரு பெண் நரகில் வேதனை செய்யப்படுவதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். எனவே, அலங்கார மீன்களை அழகுக்காக வைத்து அவற்றுக்கு முறையான உணவுகளைக் கொடுத்துப் பராமரித்து வருவது மார்க்க ரீதியாகத் தவறில்லை. இறைவன் படைத்தவற்றை வதை செய்யாமல், முறையான பராமரிப்போடு வீடுகளில் வளர்ப்பதில் எவ்விதத் தடையுமில்லை.