1. உளு இன்றி குர்ஆனைத் தொடுதல்: உளு இல்லாதவரோ, குளிப்பு கடமையானவரோ அல்லது மாதவிடாய் நிலையிலுள்ள பெண்ணோ குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு வலுவான எந்த ஆதாரங்களும் இல்லை. உளு என்ற சட்டம் மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது. அதற்கு முன் மக்காவில் 13 வருடங்களாக உளு இன்றிதான் குர்ஆன் கையாளப்பட்டது. உளு கடமையாக்கப்பட்டதும் தொழுகைக்காகத் தானே தவிர, குர்ஆனைத் தொடுவதற்கு உளு நிபந்தனை என எங்கும் கூறப்படவில்லை. எனவே, உளு இல்லாதவரோ அல்லது முஸ்லிம் அல்லாதவரோ குர்ஆனைப் படிப்பதற்காகத் தொடுவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை.
2. குர்ஆனை முத்தமிடுதல்: குர்ஆனை முத்தமிடுதல் (தக்பீல்) என்ற நடைமுறை ஒரு பித்அத்தான (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) செயலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ குர்ஆனைக் கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் அதனை முத்தமிட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இச்செயலை நாம் முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும்.
3. குர்ஆனுக்கு மேல் புத்தகங்களை வைத்தல்: கண்ணியம் என்பது ஒரு சமுதாயத்தின் உணர்வோடும் பழக்கவழக்கத்தோடும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகும். நமது சமுதாயத்தில் குர்ஆனைக் கீழே வைத்துவிட்டு ஏனைய புத்தகங்களை மேலே வைப்பதை நாம் ஒரு மனநெருடலாகக் காண்கிறோம். குர்ஆன்தான் மேலிருக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கிருப்பதால், குர்ஆனை மேலே வைத்து ஏனைய புத்தகங்களைக் கீழே வைப்பது தவறில்லை. எனினும், ஒரு தற்செயலான நிகழ்வில் குர்ஆனுக்கு மேல் வேறு புத்தகங்களை யாராவது வைத்திருந்தால், அதற்காக அவர் மார்க்க ரீதியாக குர்ஆனை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை நாம் சுமத்த முடியாது.