இஸ்லாமிய அடிப்படையில், சொந்தமாக வசிப்பதற்காக வாங்கப்பட்ட வீட்டிற்கும், வியாபார நோக்கமின்றிச் சும்மா போடப்பட்டுள்ள வெற்று நிலங்களுக்கும் (காணிகளுக்கும்) எவ்வித ஸகாத்தும் கிடையாது. எனினும், அந்த வீட்டையோ அல்லது நிலத்தையோ வாங்குவதற்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை (நிஸாபை அடைந்த தொகையை) ஒரு வருடத்திற்கும் மேலாகச் சேமித்து வைத்திருந்தால், அந்தப் பணத்திற்கு இரண்டரை சதவீதம் (2.5%) ஸகாத் கொடுத்த பின்னரே அதனை வாங்கியிருக்க வேண்டும்; கொடுக்கவில்லை என்றால் அதனைக் கணக்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும்.
அடுத்ததாக, விவசாய நிலங்களுக்கு ஸகாத் கிடையாது; ஆனால் விவசாயத்திலிருந்து கிடைக்கும் அறுவடைக்கு (750 கிலோகிராமை அடைந்தால்) ஸகாத் உண்டு. தென்னந்தோட்டத்தைப் பொறுத்தவரை, அல்குர்ஆன் மற்றும் சுன்னாவில் கூறப்பட்ட தானியங்கள் போல் தேங்காயைச் சேமித்து வைக்கவோ, நிறுத்தவோ முடியாது என்பதால், தேங்காய் விளைச்சலுக்கு நேரடியாக ஸகாத் இல்லை என்பதே பலமான நிலைப்பாடாகும். ஆயினும், அந்தத் தேங்காய்களை நீங்கள் வியாபாரப் பொருளாக (Business) மாற்றி விற்பனை செய்தால், அந்த வியாபாரப் பொருளின் மதிப்பு பத்தரை பவுன் தங்கத்தின் (நிஸாப்) அளவை அடையும் பட்சத்தில், அதன் மொத்த மதிப்பிற்கு இரண்டரை சதவீதம் (2.5%) வியாபாரப் பொருளுக்கான ஸகாத்தாகக் கட்டாயம் வழங்க வேண்டும்.