இல்லை, தலாக் (விவாகரத்து) என்பது அல்லாஹ் அனுமதித்த காரியங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது என்று வரும் செய்தியும், தலாக் கூறினால் அல்லாஹ்வுடைய அர்ஷ் நடுங்கும் என்று வரும் செய்தியும் மிகவும் பலவீனமான (ழயீஃபான) செய்திகளாகும். இறைவன் தான் ஹலாலாக்கிய (அனுமதித்த) ஒரு விஷயத்தை ஏன் வெறுக்க வேண்டும்? இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவையாகும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கான ஒரு சிறந்த தீர்வாகும். கணவன் - மனைவிக்கிடையில் எவ்விதப் பொருத்தமும் இல்லை என்றாலோ, மார்க்கப் பற்று, ஒழுக்கம் அற்ற சூழ்நிலைகள் இருந்தாலோ, அல்லது சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ, இஸ்லாம் விவாகரத்தை அனுமதிக்கிறது. அதற்காக விவாகரத்தை எடுத்த எடுப்பிலேயே செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை; அது ஒரு தேர்வு (Choice) மட்டுமே. விவாகரத்து முடிவை எடுப்பதற்கு முன், அதனால் குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்படப்போகும் எதிர்கால விளைவுகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, இஸ்லாம் காட்டிய முறைப்படிதான் (விவாகரத்துக்கான வழிமுறைகள், ஜீவனாம்சம் போன்றவற்றை பேணி) அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர, விவாகரத்து செய்வதே இறைவனுக்குக் கோபம் தரும் செயல் என்று கூறுவது மார்க்க அடிப்படையில் தவறானதாகும்.