விமானப் பிரயாணத்தில் நோன்பு திறப்பது குறித்துச் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஒருவர் சூரியன் மறையும் திசையான மேற்கை நோக்கிப் பிரயாணம் செய்தால், சூரிய அஸ்தமனம் அவருக்குப் பிந்திக்கொண்டே செல்லும். மாறாக, கிழக்கை நோக்கிப் பிரயாணித்தால் அவர் இருளை விரைவாக அடைவார். விமானத்தில் பயணிப்பவர் சூரியன் மறைவதை நேரடியாகக் காண முடியுமானால் அவர் தாராளமாக நோன்பைத் திறக்கலாம்.
ஆனால், மேற்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்பதால் 18, 20 மணித்தியாலங்கள் ஆகியும் சூரியன் மறையவில்லை என்றால், "நோன்பை விடக்கூடாது, சூரியன் மறையும் வரை காத்திருக்க வேண்டும்" என்று சில அறிஞர்கள் கூறுவது நடைமுறைக்குச் சாத்தியமற்ற, தவறான நிலைப்பாடாகும். இதற்கான சரியான தீர்வு என்னவென்றால், அவர் எந்த ஊரிலிருந்து (அல்லது நாட்டிலிருந்து) தமது பிரயாணத்தை ஆரம்பித்தாரோ, அந்த ஊரின் சூரிய அஸ்தமன நேரத்தைக் கணக்கிட்டு அந்த நேரப்படியே தனது நோன்பைத் திறந்துகொள்ள வேண்டும். இதுவே மார்க்க அடிப்படையில் சிரமமில்லாத சரியான வழிகாட்டலாகும்.