ரசூல் (ஸல்) அவர்கள் ரமழானிலோ அல்லது மற்ற மாதங்களிலோ இரவுத் தொழுகையை 11 ரக்அத்களுக்கு மேல் அதிகரித்ததில்லை. எனவே, 11 ரக்அத்கள் தொழுத பின்னர், மீண்டும் இரவில் விழித்து மேலதிகமாக 4 அல்லது 6 ரக்அத்கள் தஹஜ்ஜுத்தாகத் தொழுவதற்கு சுன்னாவில் எவ்வித ஆதாரமும் இல்லை.
சுன்னாவில் வந்துள்ள வழிகாட்டலின்படி, வித்ர் தொழுத பின்னர் ஒருவர் இரவில் விழித்தால் அவர் இரண்டு ரக்அத்கள் மாத்திரம் தொழுதுகொள்ளலாம்; மீண்டும் வித்ர் தொழக் கூடாது. சுன்னாவில் வந்த அளவோடு நிறுத்திக்கொள்வதே மிகச் சிறந்ததாகும்.
மேலும், ஒருவர் தூங்குவதற்கு முன்னால் ஒரு ரக்அத் மாத்திரம் வித்ர் தொழுவதற்கும் மார்க்கத்தில் முழுமையான அனுமதி உள்ளது. சுபஹ் வரை தம்மால் எழும்ப முடியாது எனப் பயப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்னரே 1, 3 அல்லது 5 ரக்அத்களாக வித்ர் தொழுதுகொள்ளலாம். முஆவியா (ரழி) அவர்கள் ஒரு ரக்அத் வித்ர் தொழுததை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மிகச் சரியான சுன்னாவான முறை என அங்கீகரித்துள்ளார்கள்.