மழைக்காக எங்கும், எந்த நேரத்திலும் துஆக் கேட்கலாம்; மிம்பரிலோ, சாதாரண தொழுகைகளிலோ அல்லது வீடுகளிலோ கையேந்திக் கேட்கலாம். எனினும், இதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சுன்னத்தான பிரத்தியேகத் தொழுகையைக் காட்டித் தந்துள்ளார்கள்.
இதற்காகப் பெருநாள் தொழுகை நடத்தும் வெட்டவெளித் திடலுக்குச் சென்று, பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்துகள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். தொழுது முடிந்த பின் இமாம் மிம்பரில் உரை நிகழ்த்துவார். பின்னர் கிப்லாவை முன்னோக்கித் திரும்பும் போது, இமாம் தனது மேலாடையை (தனது வலதுபுறம் இடதுபுறமாகவும், இடதுபுறம் வலதுபுறமாகவும் இருக்குமாறு) மாற்றி அணிந்து கொள்வார். அதன் பின் இமாமும் மக்களும் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் கையேந்திப் பிரார்த்தனை செய்வார்கள். இதில் ''அல்லாஹும்மஸ்கினா'' போன்ற ஹதீஸில் வந்த வார்த்தைகளையோ, அல்லது தமக்குத் தெரிந்த தமது தாய் மொழிகளிலோ மழையை வேண்டி ஆழமாகப் பிரார்த்திக்கலாம்.