குடும்பங்களில் இது பரவலாகவும் தவிர்க்க முடியாத வகையிலும் காணப்படும் ஒரு நடைமுறையாகும். அஜ்னபிகளுடன் (திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட உறவினர்களுடன்) பேசவோ, பழகவோ கூடாது என்று இஸ்லாம் முற்றிலுமாகத் தடையோ சுவரோ எழுப்பவில்லை. ஆனால், அவர்கள் வீடுகளுக்குள் தகுந்த ஆடை ஒழுக்கங்களைப் பேண வேண்டும். வெளியே அணிவது போன்று அபாயா அணியாவிட்டாலும், தங்களது உடலை முழுமையாக மறைக்கக்கூடிய சாதாரண ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
மேலும், இவர்களுடன் தனித்திருப்பதை (கலவத்) கட்டாயம் தவிர்க்க வேண்டும். சினிமா, நகைச்சுவை, தேவையற்ற நக்கல் போன்ற எல்லை மீறிய பேச்சுகளையும் தவிர்க்க வேண்டும். ஆனால் சுகம் விசாரிப்பது, உணவு மற்றும் குடும்ப நிகழ்வுகள் குறித்து சாதாரணமாகப் பேசுவதோ, பழகி நடப்பதோ மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.
இதற்கு ஆதாரமாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களை வழியில் கண்டபோது தமது ஒட்டகத்தில் ஏறிக்கொள்ளுமாறு அழைத்தார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் ஆண்களுடன் செல்வதற்கு வெட்கப்பட்டு அதைத் தவிர்த்தார்கள். நபிகளார் இதைக் கண்டிக்கவில்லை. அதேபோல, அபூ உஸைத் (ரழி) அவர்களின் வலீமா திருமண விருந்தில், அவரது மனைவியே நபிகளார் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார்கள் என்பதைப் புகாரியில் பார்க்கிறோம். எனவே, முறையான ஆடை ஒழுக்கத்துடனும், தனிமையைத் தவிர்த்தும், தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்தும் உறவினர்களோடு சாதாரணமாகப் பழகுவதிலும், மார்க்க வரம்புகளுக்குட்பட்டு குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் எவ்விதத் தடையுமில்லை. இதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது.