இன்றைய நவீன மீடியாக்களில் அல்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் உருவப்படங்களை இணைத்து விளக்கம் சொல்வது மார்க்க ரீதியாக மிகப்பெரிய குற்றமும், முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய பிழையான அணுகுமுறையுமாகும்.
அல்குர்ஆனுக்கு விளக்கவுரை (தப்ஸீர்) என்பது குர்ஆனை குர்ஆனைக் கொண்டும், ஹதீஸைக் கொண்டும், சஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் விளக்கங்களைக் கொண்டும் சொல்லப்பட வேண்டும். அதை விடுத்து, நமது கற்பனைக்கு வந்த படங்களை வசனங்களோடு இணைப்பது குர்ஆனின் புனிதத்தன்மையையும், அது தரும் விசாலமான சிந்தனையையும் சுருக்கி கொச்சைப்படுத்திவிடும்.
இதன் பாதிப்புகள்:
- அல்லாஹுத்தஆலா நோயைப் பற்றிப் பேசும் வசனத்திற்கு, ஒரு மருத்துவமனையின் படத்தையோ அல்லது வலியால் துடிப்பவரின் படத்தையோ இணைத்தால், அந்த குர்ஆன் வசனம் இந்த மருத்துவமனைக்கு மட்டும் தான் பொருந்தும் என்ற குறுக்கிய சிந்தனையை மனித மூளையில் அது பதிய வைத்துவிடும்.
- "எல்லா நோய்க்கும் மருந்து உண்டு" என்ற ஹதீஸுக்கு ஸ்டெதஸ்கோப் வைத்த ஒரு டாக்டரையும், மருந்து மாத்திரைகளையும் (Tablets) படமாகப் போட்டால், அந்த மாத்திரைகள்தான் மருந்து என்ற தவறான விளக்கத்தை அது ஆழமாகப் பதியச் செய்துவிடும்.
- குர்ஆனில் வரும் பன்றி, மாடு, எறும்பு, நாய் போன்ற மிருகங்களை வரிசையாகப் படங்களாகப் போட்டு, இது குர்ஆனில் வரும் மிருகங்கள் என்று வீடியோ உருவாக்குவது, குர்ஆனின் மீதான கண்ணியத்தையும் ஹைபத்தையும் (பயபக்தியையும்) சிறுவர்கள் மற்றும் மக்களின் உள்ளங்களிலிருந்து அகற்றிவிடும்.
படைப்பினங்களான மலைகள், மேகங்கள், வானம் போன்றவற்றின் படங்களைப் போடுவதற்குச் சிலர் விதிவிலக்கு அளித்தாலும், அதிலும் தவறான புரிதல்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, எழுத்துக்களின் மூலம் சிந்தித்து உணர்வதே குர்ஆனுக்கான உண்மையான விளக்க முறையாகும். படங்களை இணைத்து மார்க்கத்தைப் பரப்புவது மிகப்பெரிய வழிகேடுகளுக்கு இட்டுச்செல்லும்.