சூரத்துல் பகராவில் தாலூத், ஜாலூத் மற்றும் தாவூத் (அலை) ஆகியோரை உள்ளடக்கிய ஒரு முக்கிய வரலாறு கூறப்பட்டுள்ளது. மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னால் வந்த இஸ்ரவேலர்கள், தங்களது ஊரை விட்டும் விரட்டப்பட்டு அநியாயம் இழைக்கப்பட்ட போது, தங்களை வழிநடத்த ஒரு மன்னரை ஏற்படுத்துமாறு அன்றிருந்த நபியிடம் கேட்டனர்.
அப்போது அல்லாஹுத்தஆலா ''தாலூத்'' என்பவரை அவர்களுக்கு மன்னராக நியமித்தான். தாலூத் ஒரு சாதாரண நிலையில் இருந்ததால் இஸ்ரவேலர்கள் அவரை மன்னராக ஏற்க மறுத்தனர். ஆனால், "அல்லாஹ் அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் வழங்கியுள்ளான். அதற்கான அடையாளம், மலக்குமார்களால் சுமந்து வரப்படும் ஒரு பேழை (தாபூத்) அவரிடம் வரும்; அதில் மூஸா மற்றும் ஹாரூன் (அலை) குடும்பத்தார் விட்டுச்சென்ற பொருட்களும் அமைதியும் (சகீனா) இருக்கும்" என அந்த நபி விளக்கினார்.
தாலூத் தனது படையினருடன் சென்ற போது, நதியின் நீர் அருந்தக் கூடாது என ஒரு சோதனையை வைத்தார்; அதில் தாகம் தாங்க முடியாமல் பெரும்பாலானோர் தோற்றனர். இந்தத் தாலூத்தின் படையில்தான் தாவூத் (அலை) அவர்கள் இருந்தார்கள். தாவூத் (அலை) அவர்கள்தான் எதிரிப் படையின் அநியாயக்கார மன்னனான ''ஜாலூத்தை''க் கொன்றார்கள். அதன் பின்னரே அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களுக்கு ஆட்சியையும் நபித்துவத்தையும் வழங்கினான். தாலூத் என்பவர் யூசுப் (அலை) அவர்களின் சகோதரரான புன்யாமீனின் பரம்பரையில் வந்தவர் என வரலாற்று விரிவுரை நூல்கள் (தப்ஸீர்கள்) குறிப்பிடுகின்றன.