இஸ்லாமிய அடிப்படையிலும், உலகளாவிய மனித உரிமை அடிப்படையிலும் மரணித்தவர்களை அடக்கம் செய்வதுதான் (புதைப்பது) சரியான முறையாகும். எக்காரணம் கொண்டும் முஸ்லிம்கள் உடலை எரிப்பதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.
எனினும், ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது மருத்துவ நிர்வாகமோ நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒரு முஸ்லிமின் உடலை எரிக்க முற்பட்டால், அதனால் அந்த முஸ்லிமின் மறுமை வாழ்வில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
உயிர் பிரிந்த அந்த விநாடியோடு, உடலுக்கும் உயிருக்கும் உள்ள உலகத் தொடர்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் நடக்கும் கப்ருடைய விசாரணைகளுக்கும், மறுமை இன்ப துன்பங்களுக்கும், உடல் எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா, கடலில் மூழ்கியதா அல்லது விபத்தில் சிதறியதா என்பது தடையாக அமையாது. ஒருவருடைய நன்மை, தீமைகளுக்கு ஏற்பவே இறைவன் மறுமை வாழ்வைத் தீர்மானிப்பான்.
ஒருவர் இஸ்லாத்திற்காக நெருப்புக் கிடங்கில் பாய்ந்து எரிந்து போனாலும் அவருக்குரிய சுவர்க்கம் கிடைக்கும் என்பதைப் பல வரலாற்று நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே, உடலை எரிப்பது என்பது பார்ப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தாலும், மரணித்தவருக்கு அது எவ்வித மார்க்க ரீதியான இழப்பையோ தண்டனையையோ பெற்றுத் தராது.