இபாதத்துகள் மற்றும் அகீதாவில் ஏற்படக்கூடிய இந்த மனக்குழப்பம் (வஸ்வாஸ்) என்பது முற்றுமுழுதாக சைத்தானிடமிருந்து வரக்கூடியதாகும். மனிதனை ஈமானிலிருந்து வழிகெடுப்பதே சைத்தானின் நோக்கமாகும். "அல்லாஹ்வைப் படைத்தது யார்?" போன்ற கேள்விகளை சைத்தான் உள்ளத்தில் ஏற்படுத்தினால், உடனடியாக "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிவிட்டு, அதை முற்றிலும் புறக்கணிக்க (Ignore) வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அந்தச் சிந்தனைக்குப் பின்னால் விடை தேடிப் பயணிக்கக் கூடாது.
அதேபோல, தொழுகையில் சைத்தான் வந்து குழப்பங்களை ஏற்படுத்தினால், இடது பக்கமாக மூன்று முறை (காறித் துப்புவது போல்) துப்பிவிட்டு சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். தொழுகையின் ரக்அத்களின் எண்ணிக்கையில் சந்தேகம் வந்தால் (உதாரணமாக 3 தொழுதோமா, 4 தொழுதோமா என்று குழப்பம் வந்தால்), உறுதியான குறைந்த எண்ணிக்கையான 3-ஐ எடுத்துக்கொண்டு, நான்காவதைத் தொழுது முடித்துவிட்டு, இறுதியில் "சஹ்வு ஸஜ்தா" செய்து தொழுகையைப் பூரணப்படுத்த வேண்டும்.
இந்த வஸ்வாஸ் நோய் கடுமையாகப் பீடிக்கப்பட்டவர்கள், அடிக்கடி வுழூ முறிந்துவிட்டதோ, சரியாகக் குளிக்கவில்லையோ என்று மணிக்கணக்கில் கழிவறையிலும், பலமுறை தொழுவதிலும் தங்களை வருத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அல்குர்ஆனில், "ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை" என்றும், "உங்களால் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்றும் கூறுகிறான். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருமுறை உறுதியாக வுழூ செய்துவிட்டாலோ, குளித்துவிட்டாலோ அதில் சந்தேகம் வந்தாலும் அதைப் புறக்கணித்துவிட்டுத் தங்கள் வணக்கத்தைத் தொடர வேண்டும். திரும்பத் திரும்பச் செய்து கஷ்டப்படத் தேவையில்லை. இதிலிருந்து விடுபடக் காலை மாலை திக்ருகள், குல் சூராக்கள், ஆயத்துல் குர்ஸி ஆகியவற்றை ஓதி வருவதுடன், "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு..." என்ற திக்ரை காலையில் 100 முறை ஓதிவர சைத்தானிடமிருந்து பெரும் பாதுகாப்பு கிடைக்கும்.