கொரோனா கோவிட்-19 போன்ற காரணங்களால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் வீடுகளில் இஃதிகாப் இருக்கலாமா என்பது குறித்து சில நவீன அறிஞர்கள் ஷரீஆவின் நோக்கங்களை (மகாஸிதுஷ் ஷரீஆ) விரிவுபடுத்தி வீடுகளில் இருக்கலாம் என்று கூறினாலும், அது சரியான நிலைப்பாடு அல்ல. அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இஃதிகாப் என்பது மஸ்ஜிதுகளோடு மட்டுமே தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. அல்குர்ஆனில், "நீங்கள் மஸ்ஜிதுகளில் இஃதிகாப் இருக்கும்போது மனைவியரோடு சேராதீர்கள்" என்றும், இஃதிகாப் இருப்பவர்களுக்காகப் பள்ளிவாசலைச் சுத்தம் செய்யுமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களுடைய மனைவியர்கள், மற்றும் சஹாபாக்கள் அனைவரும் மஸ்ஜிதிலேதான் இஃதிகாப் இருந்துள்ளார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் எந்த மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்க வேண்டும் (மஸ்ஜிதுல் ஹராம், நபவி, அக்ஸாவா? அல்லது ஜும்ஆ பள்ளியா? அல்லது ஜமாஅத் நடக்கும் பள்ளியா?) என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வீடுகளில் இஃதிகாப் இருக்கலாம் என்று யாருமே கூறவில்லை. எனவே, இஃதிகாப் என்பது மஸ்ஜிதில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உறுதியான மார்க்கத் தீர்ப்பாகும்.
முந்தைய வருடங்களில் வழமையாக இஃதிகாப் இருந்துவந்த ஒருவர், நோய் அல்லது லாக்டவுன் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வருடம் மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்க முடியாமல் போனால், அவர் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போது செய்துவந்த அமலை, நோயின் காரணமாகவோ அல்லது பிரயாணத்தின் காரணமாகவோ செய்ய முடியாமல் போனால், அவர் அதைச் செய்ததற்கான முழுமையான கூலியை அல்லாஹ் வழங்குவான்" என்று நன்மாராயம் கூறியுள்ளார்கள். எனவே, வீடுகளில் இஃதிகாப் என்ற நிய்யத்தோடு இருப்பது கூடாது; மாறாக அவர்கள் செய்ய நினைத்ததற்கான நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு நிறைவாக வழங்குவான்.