ஐங்கால ஃபர்ழான தொழுகைகளை நின்று தொழுவது என்பது தொழுகையின் அடிப்படை தூண்களில் (ருக்குன்) ஒன்றாகும். நின்று தொழ சக்தி உள்ள ஒருவர் காரணமின்றி உட்கார்ந்து தொழுதால் அவரது ஃபர்ழான தொழுகை செல்லுபடியாகாது. சொந்த வாகனத்தில் பிரயாணம் செய்யும்போது தொழுகை நேரம் வந்தால், வாகனத்தை நிறுத்தி நிலத்தில் இறங்கி நின்றுதான் தொழ வேண்டும்.
ஆனால் ரயில், விமானம் அல்லது பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும்போது, வண்டி இலக்கை அடைவதற்குள் தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால், அந்த வாகனத்திற்குள்ளேயே நின்று கிப்லாவை முன்னோக்கித் தொழ முடியுமானால் அவ்வாறு தொழ வேண்டும். நிற்கவும் முடியாது, கிப்லாவை முன்னோக்கவும் முடியாது என்ற தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மட்டும், அல்லாஹ் எவரையும் சக்திக்கு மீறிச் சிரமப்படுத்துவதில்லை என்ற விதியின் அடிப்படையில், வாகனத்தில் இருக்கையிலேயே அமர்ந்து ஃபர்ழான தொழுகையை நிறைவேற்ற மார்க்கம் அனுமதிக்கிறது.
ஆனால் சுன்னத்தான தொழுகைகளைப் பொறுத்தவரையில், பிரயாணத்தில் வாகனத்திலோ அல்லது வீட்டில் இருக்கும்போதோ எவ்வித நிர்ப்பந்தமுமின்றி உட்கார்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் முழு அனுமதி உள்ளது. எனினும், நின்று தொழும் நன்மையில் பாதி நன்மையே உட்கார்ந்து தொழுபவருக்குக் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.