வஸ்வாஸ் என்பது சுமார் இரண்டு மூன்று சதவீதமானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு உளவியல் பிரச்சனையாகும். இது வளர்ச்சியடைந்து OCD (Obsessive Compulsive Disorder) என்ற மோசமான நிலையை அடையும் போது, பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், சிலநேரம் தற்கொலை எண்ணத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். இதற்குக் சூழல் மற்றும் உளவியல் காரணிகள் இருப்பதுபோல, சைத்தானுக்கும் இதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இது ஆரம்பத்தில் சுத்தம் (மலசலம் கழித்தல், வுழூ, குளிப்பு) மற்றும் தொழுகையில் தொடங்கி, சிலநேரம் அகீதா சார்ந்த (நம்பிக்கை சார்ந்த) விஷயங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இதற்கான இஸ்லாமிய மற்றும் உளவியல் தீர்வுகள்:
1. ஆரம்ப நிலையிலேயே தகுந்த மார்க்க அறிஞர்களிடம் (உலமாக்களிடம்) கவுன்சிலிங் பெற வேண்டும்; கூச்சப்பட்டு மறைத்து வைத்தால் நிலைமை மோசமாகிவிடும்.
2. இது சைத்தானின் ஊசலாட்டம் என்பதைப் புரிந்து கொண்டு, குர்ஆன் சுன்னா வழியில் செல்ல வேண்டும் (உதாரணமாக: வுழூவை ஒருமுறை சரியாகச் செய்த பிறகு சந்தேகம் வந்தால் அதை இக்னோர் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். அகீதா குழப்பம் வந்தால் 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' எனக் கூறி அந்தச் சிந்தனையைப் புறக்கணிக்க வேண்டும்).
3. அல்லாஹ்விடம் நிறைய துஆக் கேட்பதோடு, இஸ்லாம் காட்டிய 'ருக்யா' முறைகளையும், காலை மாலை திக்ருகளையும் (குறிப்பாக 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு...' என்ற திக்ரை காலையில் 100 முறை ஓதுவது) பேணிவர வேண்டும்.
4. நிலைமை தீவிரமாக இருந்தால், கட்டாயம் ஒரு மனநல மருத்துவரை (Psychiatrist / Psychotherapist) அணுகி முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.