ரசூல் (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஊரில் இருக்கும்போதும், பிரயாணத்தில் இருக்கும்போதும் விடாமல் பேணித் தொழுது வந்த ஒரு தொழுகை வித்ருத் தொழுகையாகும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரசூல் (ஸல்) அவர்களுக்குத் தூக்கம் அல்லது நோய், உடல் அசதி காரணமாக இரவிலே வித்ரு தொழ முடியாமல் போனால், அதை அவர்கள் பகலில் பன்னிரண்டு ரக்அத்துகளாகத் தொழுது கொள்வார்கள்.
எனவே, இரவில் வழமையாக வித்ரு தொழுது வரும் ஒருவருக்கு நியாயமான காரணங்களினால் வித்ரு தொழுகை தவறிவிட்டால், அவர் அதைப் பகலில் தொழுதுகொள்ளலாம். ஆனால், பகலில் தொழும்போது அதனை ஒற்றைப்படையாகத் தொழாமல், இரட்டைப்படையாகத் தொழ வேண்டும். உதாரணமாக, வழமையாக 3 ரக்அத்துகள் வித்ரு தொழுபவர் பகலில் 4 ரக்அத்துகளாகவும், 5 ரக்அத்துகள் தொழுபவர் 6 ரக்அத்துகளாகவும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகத் தொழுதுகொள்ள வேண்டும். ரசூல் (ஸல்) அவர்கள் இரவில் 11 ரக்அத்துகள் தொழக்கூடிய வழமை உள்ளவர்களாக இருந்ததால், பகலில் கழா செய்யும்போது 12 ரக்அத்துகளாகத் தொழுதார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.