முஸாபஹா என்றால் கைலாகு செய்தல் (Hand shaking) என்பது அதனுடைய அர்த்தமாகும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிம் சகோதரனுக்கு கை கொடுக்கும் போது அவர்களுடைய பாவங்கள் மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து விடுவது போல உதிர்ந்துவிடும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே முஸாபஹா செய்வது ஆர்வமூட்டப்பட்ட ஒரு சிறந்த செயலாகக் காணப்படுகிறது. ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும், அதேபோன்று மஹ்ரமான உறவுகளுக்கும் (மனைவி, தாய், சகோதரி) கைகொடுக்கலாம் மார்க்கத்தில் இதற்கு தடை இல்லை. ஆனால் ஒரு அந்நிய ஆண் அந்நிய பெண்ணுக்கு கை கொடுப்பது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்.
\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வரக்கூடியவர்களிடம் பைஅத் எடுக்கும்போது ஆண்களின் கைகளில் கைகளை வைத்து பைஅத் செய்வார்கள், ஆனால் பெண்களிடம் பைஅத் எடுக்கும்போது வாய்மொழி மூலம் மாத்திரமே எடுப்பார்கள். "நபி (ஸல்) அவர்களின் கை எந்த அந்நியப் பெண்ணின் கைகளையும் தொட்டது கிடையாது" என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம். சந்திக்கும்போது எத்தனை தடவை சந்தித்தாலும் ஸலாம் சொல்லி கை கொடுப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும்.
\nஅதே நேரத்தில் முஆனகா (கட்டி அணைப்பது) என்பதைப் பொறுத்தவரையில், சஹாபாக்களை பற்றி சொல்லும்போது அவர்கள் சந்தித்தால் கைலாகு செய்வார்கள், நீண்ட பிரயாணத்திலிருந்து வந்தால் முஆனகா செய்வார்கள் என்று ஹதீஸ் நூல்களிலே நாம் பார்க்கிறோம். அந்த அடிப்படையில் பிரயாணங்களில் இருந்து வரும்போது கட்டி அணைப்பது என்பது நபித்தோழர்களிடம் இருந்த ஒரு நடைமுறையாகும்.