இந்த கேள்வி கேட்கப்படுவதற்கான காரணம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நபித்தோழர் முகம் குப்புற தூங்கிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "இது நரகவாதிகள் படுக்கிற முறை" என்று கூறினார்கள் என்கிற ஒரு செய்தி இப்னு மாஜாவிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல அபூதாவூதிலே பதிவு செய்யப்பட்ட ஒரு ஹதீஸிலே "அல்லாஹுத்தஆலா வெறுக்கிற ஒரு முறைதான் இது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று வருகிறது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து முகம் குப்புறப் படுப்பது கூடாது என்கிற கருத்தை உலமாக்களில் சிலர் கூறுகிறார்கள்.
\nஆனால் உண்மையில் இந்த ஹதீஸின் தரம் பற்றி ஆய்வு செய்யக்கூடிய பிற்கால அறிஞர்கள், நவீன கால அறிஞர்கள் இந்த ஹதீஸ்கள் அனைத்துமே பலவீனமான ஹதீஸ்கள் என்று கூறுகிறார்கள். எனவே முகம் குப்புறப் படுப்பது என்பது ஹராம் என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வர முடியாது. காரணம் உறுதியான தெளிவான ஆதாரங்கள் அதற்கு இல்லாமல் இருப்பது. இருந்தாலும் கூட அதிகமான ஃபுக்கஹாக்கள் (சட்டக்கலை அறிஞர்கள்) முகம் குப்புறப் படுப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்கிற கருத்தை சொல்கிறார்கள். முகம் குப்புறப் படுப்பதனால் வயிறு, கிட்னி போன்றவற்றில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்கிற ஒரு நியாயத்தையும் முன்வைத்திருக்கிறார்கள்.
\nஒரு முஃமினை பொறுத்தவரையில் அவர் தூங்குகிற போது தன்னுடைய வலது கன்னத்தில் வலது கையை வைத்து தூங்குவது சிறந்ததாகவும், நபி (ஸல்) அவர்கள் அந்த முறைக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதையும் ஸஹீஹான ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம். எனவே முடியுமானவரை நாம் அந்த அமைப்பில் தூங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் முகம் குப்புற தூங்குகிறார் என்றால் அது பாவமானது ஹராமானது என்று சொல்ல முடியாது.