எல்லோருமே தங்களுடைய பெயர்களை எழுதுகிறபோது தந்தையுடைய பெயரோடு சேர்த்து எழுதுவதுதான் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட சரியான முறையாகும். "அவர்களுடைய தந்தைகளின் பெயர்களைக் கொண்டே அவர்களை அழையுங்கள்" என்று அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. ஒரு பெண் திருமணமான பின்பு கணவனுடைய பெயரோடு சேர்த்துத் தன்னுடைய பெயரை எழுதுவதோ அல்லது அடையாளப்படுத்துவதோ இஸ்லாமிய நடைமுறை கிடையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர்களான அன்னை ஆயிஷா, அன்னை ஹஃப்ஸா போன்றவர்களை அழைக்கும்போதுகூட, அவர்களைத் தங்களின் தந்தையின் பெயர்களோடு இணைத்து 'ஆயிஷா பின்த் அபூபக்கர்', 'ஹஃப்ஸா பின்த் உமர்' என்றுதான் அழைக்கப்பட்டார்களே தவிர, கணவரான நபிகளாரின் பெயரோடு இணைத்து அழைக்கப்படவில்லை. மேலும், திருமணத்திற்குப் பின் கணவனின் பெயரை பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் சேர்ப்பதனால், ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால் பெயரை மாற்றுவதில் பல்வேறு சட்டச் சிக்கல்களும், மன உளைச்சல்களும் ஏற்படுகின்றன. எனவே, ஒரு பெண் திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி தனது தந்தையின் பெயரையே தன் பெயருடன் இணைத்துப் பயன்படுத்துவதே இஸ்லாமிய மார்க்கம் காட்டும் தூய நெறியாகும்.