Dr. ஷேக் முபாரக் மதனி

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடித்துத் தண்டிக்கலாமா?

குழந்தை வளர்ப்பு தர்பியா தண்டித்தல் அடித்தல்

← முந்தையஅடுதது →
கேள்வி
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடித்துத் தண்டிக்கலாமா?
பதில்
பதில்:

பிள்ளைகள் அல்லாஹ்வினால் பெற்றோருக்கு வழங்கப்படக்கூடிய அமானிதங்களும் அன்பளிப்புகளுமாவர். அவர்களை ஸாலிஹான (நல்லொழுக்கமுள்ள) பிள்ளைகளாக வளர்த்து நரகத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும். நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் விசாரிக்கப்படவுள்ள இந்தப் பொறுப்பில் பொடுபோக்காக இருக்கும் பெற்றோர்கள் இம்மையிலும் மறுமையிலும் பெரும் கைசேதத்தைச் சந்திப்பார்கள்.

குழந்தை வளர்ப்புக்கு அழகிய முன்மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அவர்களுடைய குழந்தை வளர்ப்பில் கடுமையை விட அன்புக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. அன்பைக் கொடுத்து வளர்ப்பதே வெற்றிகரமான குழந்தை வளர்ப்பு முறையாகும். தேவைப்படும்போது எச்சரிக்கைக்காக லேசாக அடிக்கலாம் என பல அறிஞர்கள் அனுமதித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக, "குழந்தைகள் 7 வயதை அடைந்தால் தொழ ஏவுங்கள், 10 வயதானால் அடித்துத் தொழச் சொல்லுங்கள்" என்ற ஹதீஸை முன்வைக்கின்றனர். இருப்பினும், இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்தும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்தக் குழந்தையையும் அடித்ததில்லை. மேலும், முகத்தில் அடிப்பது (அது மனைவியாகவோ, குழந்தையாகவோ, மாணவர்களாகவோ இருந்தாலும்) மார்க்கத்தில் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அடிப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, குழந்தை வளர்ப்பில் மென்மையும், அன்பும், கருணையும்தான் முன்னிலை வகிக்க வேண்டுமே தவிர, அடிப்பதைத் தவிர்த்துக்கொள்வதே மிகச் சிறந்த வழிமுறையாகும்.

← முந்தையஅடுதது →