சமுதாயத்தில் பெருநாட்கள் வரும்போது ஒருவர் மற்றவரை வாழ்த்துகின்ற நடைமுறை பரவலாகக் காணப்படுகிறது. சஹாபாக்கள் மத்தியிலும் இத்தகைய நடைமுறை இருந்திருப்பதை ஹதீஸ் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. ஜுபைர் இப்னு நுபைர் (ரஹ்) அவர்கள் கூறும்போது, "ரசூல் (ஸல்) அவர்களின் தோழர்கள் பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது 'தக்கப்பலல்லாஹு மின்னா வமின்கும்' (எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் அல்லாஹ் நற்கருமங்களை ஏற்றுக்கொள்வானாக) என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். இந்தச் செய்தி 'ஹசன்' (அழகான) தரத்தில் உள்ள ஆதாரப்பூர்வமான செய்தி என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களும் இவ்வாறு கூறுவதில் குற்றமில்லை என அனுமதித்துள்ளார்கள்.
எனினும், பெருநாள் வாழ்த்தாக இன்ன வார்த்தைகளைத்தான் சொல்ல வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் எந்த வழிகாட்டலையும் தரவில்லை. எனவே "தக்கப்பலல்லாஹு மின்னா வமின்கும்" அல்லது "ஈத் முபாரக்" என்று சொல்வதை 'சுன்னத்' என்று நாம் வாதிட முடியாது, ஏனெனில் இதற்கு நேரடியான நபிவழி ஆதாரம் கிடையாது.
இது குறித்து ஷேக் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறும்போது, "பெருநாள் தினத்தில் வாழ்த்துச் சொல்வது அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயமாகும். இதற்கு என்று பிரத்தியேகமான வாசகங்கள் மார்க்கத்தில் கிடையாது. மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ள சொற்களில் இஸ்லாத்திற்கு முரணான பாவமான வார்த்தைகள் இடம்பெறாத வரை, அவர்கள் அரபியிலோ, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வாழ்த்துவது அனுமதிக்கப்பட்டதாகும்" என்று கூறுகிறார்கள். எனவே, மக்கள் வழக்கத்தின் அடிப்படையில் "ஈத் முபாரக்" என்று கூறுவதில் எவ்விதத் தவறுமில்லை. ஆனால் அதை "சுன்னத்" என்று கருதுவது பிழையானதாகும்.