ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் கப்றுகளை ஸியாரத் செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கப்றுகளை ஸியாரத் செய்வதை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன். இனி நீங்கள் அதை ஸியாரத் செய்யுங்கள், அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்" என்று கூறி அனுமதித்தார்கள். எனவே பொது மையவாடிகளுக்குச் சென்று கப்றுகளை ஸியாரத் செய்வது ஈமானைப் புதுப்பிப்பதற்கும், மறுமைச் சிந்தனையை அதிகரிப்பதற்கும் உரிய ஒரு சிறந்த சுன்னத்தாகும்.
ஆனால், சில மக்கள் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமோ அல்லது பெருநாள் தினங்களில் மாத்திரமோ குறிப்பாகக் கப்றுகளை ஸியாரத் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த பொதுவான ஒரு சுன்னத்தை, நாமாக ஒரு குறிப்பிட்ட நாளுக்கு உரித்தாக்குவதாக இருந்தால் அதற்கு குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து தெளிவான ஆதாரம் வேண்டும்.
ஹதீஸ்களில் வெள்ளிக்கிழமையையோ அல்லது பெருநாள் தினங்களையோ குறிப்பாக ஸியாரத் செய்வதற்குரிய நாளாக ஆக்குவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் ஸியாரத் செய்யும் வழக்கமுடைய ஒருவர், தற்செயலாகப் பெருநாள் அன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ சென்றால் அதில் குற்றமில்லை. ஆனால், பெருநாள் தினத்திற்கு மட்டும் என அதைக் குறிப்பாக ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டிய பித்அத் (நூதன அனுஷ்டானம்) என்று மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.