பொதுவாக, உயிருள்ளவற்றின் உருவப்படங்களைக் கைகளினால் வரைவது அல்லது உருவாக்குவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை ஹதீஸ்களின் மூலம் நாம் அறிவோம். ஆனால், இந்த பொதுவான தடையிலிருந்து குழந்தைகள் விளையாடுவதற்காகச் செய்யப்படும் பொம்மைகள் (Dolls) விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொம்மைகளை விற்பதும், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதை பெரும்பாலான உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பெண் பிள்ளைகளின் வடிவில் உள்ள பொம்மைகளை வைத்து விளையாடினார்கள் என்று வரக்கூடிய ஹதீஸை (புகாரி, முஸ்லிம்) முன்வைக்கிறார்கள். எனவே, கடைகளில் விற்கப்படக்கூடிய துணிகளால், பஞ்சுகளால் (Sponge) அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சாதாரண பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலோ, விற்பனை செய்வதிலோ எவ்விதக் குற்றமுமில்லை.
இருந்தாலும் கூட, சில உலமாக்கள், பிளாஸ்டிக்கில் தத்ரூபமாக, கண், மூக்கு என முழுமையான ஒரு மனித உருவத்தைத் தரக்கூடிய அமைப்பில் உள்ள பொம்மைகளைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது என்று கூறுகிறார்கள். எனவே, பொதுவாக துணி அல்லது பஞ்சுகளால் செய்யப்படும் பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதில் எந்தத் தடையுமில்லை.