தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் இத்தாவில் இருக்கும்போது கணவன் மீட்டெடுத்துக் கொள்வது போன்று, குல்உ செய்யப்பட்ட பெண்ணை மீட்டெடுக்க முடியாது. ஒரு பெண் தனக்குக் கொடுக்கப்பட்ட மஹரைத் திருப்பிக் கொடுத்து, கணவனோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து குல்உ செய்து கொண்டால், அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள திருமண உறவு முற்றிலுமாக முறிந்து விடுகிறது என்பதே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உலமாக்களின் கருத்தாகும்.
எனவே, அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால், அவர்கள் புதிதாக திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அந்தப் பெண் இத்தாவில் இருக்கும் நேரமாக இருந்தாலும் சரி, இத்தா முடிந்த பிறகாக இருந்தாலும் சரி, புதிதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, புதிய மஹர் கொடுக்க வேண்டும், இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும், ஈஜாப்-கபூல் செய்யப்பட வேண்டும். புதிதாக ஒரு திருமணம் முடிப்பதற்கு என்னென்ன அம்சங்கள் தேவையோ அத்தனை அம்சங்களையும் பேணிய நிலையில் இரண்டு பேரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதே இதிலே சரியான கருத்தாகும்.