குளிப்பு கடமையான ஒருவர் கட்டாயமாக குளித்துவிட்டுத் தான் தொழ வேண்டும் என்பது மார்க்கச் சட்டமாகும். ஆனால், குளிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தால்—அதாவது அவருக்கு ஒரு நோய் இருக்கிறது, அல்லது கடுமையான குளிராக இருக்கிறது, அல்லது தண்ணீர் கிடைக்கவில்லை என்பது போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் இருந்தால்—அவர் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்து கொள்ளலாம். தயம்மும் செய்துவிட்டு அவர் சுபஹ் தொழுகையை நிறைவேற்றுவார்; இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும்.
அவர் மீண்டும் குளிக்க வேண்டுமா என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில், "ஒரு முஃமினைப் பொறுத்தவரையில் 10 வருடங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தூய்மையான மண்ணைக் கொண்டு தயம்மும் செய்துகொள்ளலாம்" என்று கூறிவிட்டு, "தண்ணீரைப் பெற்றுக்கொண்டால் அவர் அல்லாஹ்வைத் தக்வா செய்துகொள்ளட்டும்; அந்தத் தண்ணீரைத் தன்னுடைய மேனியில் பயன்படுத்தட்டும் (குளித்துக்கொள்ளட்டும்)" என்று கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து, குளிக்க முடியாத சூழ்நிலையில் தயம்மும் செய்து தொழுதவர், பிறகு தண்ணீர் கிடைத்தாலோ அல்லது அவர் குளிக்க முடியாததற்கான காரணம் நீங்கிவிட்டாலோ (குளிர் அல்லது நோய் நீங்கிய பின்), அவர் கட்டாயம் குளித்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை உலமாக்கள் முன்வைக்கிறார்கள்.