நமது சமூக வழக்கத்தில், தாயின் உடன் பிறந்த சகோதரிகளான சிறிய தாயார், பெரிய தாயார் ஆகியோரின் பிள்ளைகளையும், தந்தையின் உடன் பிறந்த சகோதரர்களான சிறிய தந்தை, பெரிய தந்தை ஆகியோரின் பிள்ளைகளையும் தங்களது சொந்த உடன் பிறந்த சகோதர சகோதரிகளாகப் பாவிக்கும் ஒரு முறை இருந்து வருகிறது. ஆனால் மார்க்க அடிப்படையில் இவர்கள் நமக்கு மஹ்ரமானவர்களா (திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்களா) அல்லது அஜ்னபிகளா (திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்களா) என்பதை அல்குர்ஆன் மிகத் தெளிவாக விளக்குகிறது.
அல்குர்ஆனின் அன்-நிஸா அத்தியாயத்தின் 23-வது வசனத்தில் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட மஹ்ரமான உறவுகள் யார் யார் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இவர்கள் இடம்பெறவில்லை. மேலும், அல்-அஹ்ஸாப் அத்தியாயத்தின் 50-வது வசனத்தில், "உமது தந்தையின் சகோதரர்களின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளின் புதல்விகள், உமது தாயின் சகோதரர்களின் புதல்விகள், உமது தாயின் சகோதரிகளின் புதல்விகள் ஆகியோரை உமக்கு நாம் ஹலாலாக்கியுள்ளோம்" என்று அல்லாஹ் நேரடியாகவே குறிப்பிடுகின்றான்.
எனவே, சிறிய தாயார், பெரிய தாயார், சிறிய தந்தை, பெரிய தந்தை ஆகியோரின் மக்கள் நமக்கு அஜ்னபிகளான (அந்நியமான) பெண்களாவர். அவர்களைத் திருமணம் முடிப்பது மார்க்கத்தில் முற்றிலும் ஹலாலானது (அனுமதிக்கப்பட்டது) ஆகும். ஆகவே, அவர்களோடு நாம் வைத்துக் கொள்ளக்கூடிய தொடர்புகள் அந்நியப் பெண்களோடு பேண வேண்டிய இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவே அமைய வேண்டும்.