இஸ்லாத்தில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒரு இபாதத்தாக (வணக்கமாக) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறையில் திருமணம் நிறைவேறுவதற்குச் சில அடிப்படையான அம்சங்கள் அவசியமாகும். முதலாவதாக, மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் திருப்திப்பட்டு, விரும்பித் திருமணம் முடிக்க வேண்டும்; எவரையும் நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. இரண்டாவதாக, பெண்ணுடைய பொறுப்பாளரான 'வலீ'யின் அங்கீகாரம் அவசியம். மூன்றாவதாக, இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். நான்காவதாக, மணமகள் கேட்கக்கூடிய மஹரைக் கொடுப்பதற்கு மணமகன் சக்தி பெற்றிருக்க வேண்டும்.
இந்த அம்சங்கள் இருக்கும் நிலையில், 'ஈஜாப் - கபூல்' எனப்படும் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். பெண்ணின் வலீ "என்னுடைய பொறுப்பில் உள்ள இன்னாரை உமக்கு நான் திருமணம் முடித்துத் தருகிறேன்" என்று சொல்வது 'ஈஜாப்' ஆகும். மணமகன் "அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறுவது 'கபூல்' ஆகும். இது நிறைவேறிவிட்டால் திருமணம் முழுமையடைந்து விடுகிறது. தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு, மணமகன் தனது சக்திக்கு உட்பட்டவாறு உணவு அல்லது இனிப்புப் பதார்த்தங்களை வழங்கி 'வலீமா' விருந்து அளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
திருமணத்தோடு தொடர்புடைய துஆக்களைப் பொறுத்தவரையில்: மணமகன், மணமகளைக் கரம்பிடிக்கும்போது அவளது நெற்றி முடியைப் பிடித்து "பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வக்ரைர மா ஜபல்த்தஹா அலைஹி, வஅஊது பிக்க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜபல்த்தஹா அலைஹி" என்று ஓதுவது சிறந்தது. அதேபோன்று, தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்னால் "பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா" என்று ஓதிக்கொள்ள வேண்டும். மணமக்களை வாழ்த்துபவர்கள் "பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்" என்று கூறி வாழ்த்துவது நபிவழியாகும்.