இஸ்லாத்தில் ஒரு ஆண் ஒரே நேரத்தில் அதிகபட்சம் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல மனைவியரிடையே நீதமாக நடந்துகொள்ள முடியுமாக இருந்தால் மட்டுமே இதற்கு அனுமதியுள்ளது என்பதை அல்குர்ஆன் (4:3) தெளிவுபடுத்துகிறது.
இரண்டாவது திருமணம் முடிப்பதற்கு முதல் மனைவியிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் குர்ஆனிலோ ஹதீஸிலோ கிடையாது. எனவே, மார்க்க அடிப்படையில் முதல் மனைவியின் அனுமதி அவசியமற்றதாகும். எந்தவொரு நிபந்தனையையும் இஸ்லாத்தில் புதியதாக உருவாக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
எனினும், ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) போன்ற அறிஞர்கள் இது குறித்து ஆலோசனையாகக் குறிப்பிடும்போது: கணவன் தன்னிச்சையாக இரண்டாவது திருமணம் செய்து, அதனால் முதல் மனைவியுடன் சண்டைகளும் குடும்பத்தில் பிளவுகளும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். முதல் மனைவியிடம் கலந்துரையாடி, அவளுக்குரிய நியாயங்களை எடுத்துக்கூறி, அவளது திருப்தியோடும் மனமுவப்போடும் இரண்டாவது திருமணத்தைச் செய்வது குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நிலைநிறுத்த வழிவகுக்கும். அதேவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்ய நாடுபவருக்கு மனைவியருக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளும் முழுமையான தகுதியும், பொருளாதார வசதியும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.