தொழுகையில் சூரா பாத்திஹா ஓதுவது கட்டாயமாகும். தனித்துத் தொழுபவர் ஓதாவிட்டால் தொழுகை செல்லாது. ஆனால், இமாமைப் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) இமாம் சத்தமிட்டு ஓதும்போது தானும் ஓத வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையே மூன்று கருத்துக்கள் உள்ளன. 1. மஃமூம் கட்டாயம் ஓதியாக வேண்டும் (இமாம் ஷாஃபி), 2. இமாம் ஓதுவதே மஃமூமுக்குப் போதுமானது, ஓதத் தேவையில்லை (இமாம் அபூ ஹனீபா), 3. இமாம் சத்தமிட்டு ஓதுவது தெளிவாகக் கேட்டால் மஃமூம் ஓதத் தேவையில்லை, கேட்காவிட்டால் ஓதிக்கொள்ள வேண்டும் (இமாம் மாலிக் மற்றும் இமாம் அஹ்மத்).
இந்த மூன்றில் குர்ஆன், சுன்னாவுக்கு மிக நெருக்கமான கருத்தாக மூன்றாவது கருத்தே காணப்படுகிறது. அதாவது, முதல் இரண்டு ரக்அத்துகளில் இமாம் சத்தமிட்டு ஓதுவது தெளிவாகக் கேட்டால், மஃமூம் அதனைச் செவிமடுத்தால் போதுமானது; ஓதத் தேவையில்லை. ஒலிபெருக்கி வசதி இல்லாமல் இமாம் ஓதுவது கேட்காத தொலைவில் நிற்பவர்கள் கட்டாயம் சூரா பாத்திஹாவை ஓதிக்கொள்ள வேண்டும். அதேபோன்று, சத்தமின்றி ஓதப்படும் பிந்திய ரக்அத்துகளிலும் மஃமூம்கள் கட்டாயம் சூரா பாத்திஹாவைத் தமக்குள் ஓதிக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தாமதமாக வந்து, இமாம் ருகூஃவில் இருக்கும்போது தக்பீர் கட்டி இணைபவருக்கு அந்த ரக்அத் கணக்கில் சேரும்; அவர் சூரா பாத்திஹா ஓத முடியாவிட்டாலும் அது குற்றமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.