அல்குர்ஆனில் ஸஜ்தாவுக்குரிய இடங்கள் 15 உள்ளன என்று அபூதாவூத், இப்னு மாஜா போன்ற நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால் நவீன கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸ் பலவீனமானது என்று குறிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 5, 6 அல்லது 7 இடங்களில் ஸஜ்தா செய்ததாக வேறு பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண முடிகிறது. இருப்பினும், 15 இடங்களில் ஸஜ்தா செய்யக்கூடிய நடைமுறை நீண்ட காலமாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து வருகிறது.
ஸஜ்தா வசனங்கள் வரும் இடங்களில் கட்டாயம் ஸஜ்தா செய்ய வேண்டுமா என்றால், அது கட்டாயமில்லை. ஸஜ்தா செய்வது சுன்னத்; செய்யாமல் விடுவதும் சுன்னத் ஆகும். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் மிம்பரில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஸஜ்தா வசனத்தை ஓதியதும் கீழே இறங்கி வந்து ஸஜ்தா செய்தார்கள். அடுத்த வாரம் அதே வசனத்தை ஓதியபோது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை. மக்கள் ஆச்சரியப்பட்டபோது, "இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னா என்பதை உங்களுக்குக் காண்பிப்பதற்காகவே சென்ற வாரம் ஸஜ்தா செய்தேன், இந்த வாரம் செய்யவில்லை" என்று கூறினார்கள்.
எனவே, ஸஜ்தா வசனங்கள் வரும் இடங்களில் ஸஜ்தா செய்வது சுன்னத்தான காரியமே தவிர, அது கட்டாயக் கடமையல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.