Dr. ஷேக் முபாரக் மதனி

சுன்னத் தொழுகைகளில் சூரத்துல் பாத்திஹாவை மாத்திரம் ஓதினால் தொழுகை நிறைவேறுமா?

தொழுகை சுன்னத் சூரா பாத்திஹா சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
சுன்னத் தொழுகைகளில் சூரத்துல் பாத்திஹாவை மாத்திரம் ஓதினால் தொழுகை நிறைவேறுமா?
பதில்
பதில்:

பொதுவாக ஃபர்ழான தொழுகையாக இருந்தாலும் சுன்னத்தான தொழுகையாக இருந்தாலும் சூரத்துல் பாத்திஹாவை ஓதுவது அவசியமாகும். அதை உலமாக்கள் தொழுகையினுடைய அடிப்படை அம்சங்களில் (ருக்குன்) ஒன்றாக அடையாளப்படுத்துகிறார்கள். சூரத்துல் பாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் கண்டிப்பாக அனைத்துத் தொழுகைகளிலுமே சூரத்துல் பாத்திஹாவை ஓதிக்கொள்ள வேண்டும்.

சுன்னத்தான தொழுகைகளில் சூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதித் தொழுதால் தொழுகை சேருமா என்பதைப் பொறுத்தவரையில், மிகப்பெரும்பாலான இமாம்களுடைய கருத்துப்படி, சுன்னத் தொழுகையில் மட்டுமல்ல ஃபர்ழான தொழுகைகளிலும் சூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஒருவர் ஓதித் தொழுதால் அவருடைய தொழுகை சேரும் (நிறைவேறிவிடும்) என்பதுதான். ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுடைய சுன்னாவைப் (வழிமுறையை) பொறுத்தவரையில், அவர்கள் பொதுவாக நான்கு ரக்அத்தோ அல்லது மூன்று ரக்அத்தோ உள்ள தொழுகைகளாக இருந்தால், முதல் இரண்டு ரக்அத்துக்களில் சூரத்துல் பாத்திஹாவையும் அதனோடு சேர்த்து இன்னும் ஒரு சூராவையும் ஓதிக்கொள்வார்கள். ஏனைய பிந்திய ரக்அத்துக்களிலே அவர்கள் சூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதுவார்கள்.

புகாரி மற்றும் முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு ஹதீஸில், அபூ கத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ளுஹர், அஸர் தொழுகைகள் தொழுவிக்கும் போது முதலிரண்டு ரக்அத்துக்களிலும் சூரத்துல் பாத்திஹாவையும் அதனோடு சேர்த்து இன்னும் ஒரு சூராவையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்துக்களிலும் சூரத்துல் பாத்திஹாவை மாத்திரம் ஓதுவார்கள். இந்த நடைமுறை உமர் (ரலி), அலி (ரலி) போன்ற சஹாபாக்களிடமும் இருந்ததை நாம் பார்க்கிறோம். வேறு சில அறிவிப்புகளில், மற்ற ஏனைய பிந்திய ரக்அத்துகளிலே அவர்கள் சூரத்துல் பாத்திஹா அல்லாத வேறு சூராக்களை ஓதியது போன்ற செய்திகளும் முஸ்லிமிலே வருவதை நாம் பார்க்கிறோம்.

சுருக்கமாக, முதல் இரண்டு ரக்அத்துக்களில் சூரத்துல் பாத்திஹாவோடு இன்னும் ஒரு சூராவை ஓதுவது சுன்னத்தாகும். அந்த அடிப்படையில் சுன்னத்தான தொழுகைகளிலும் சூரத்துல் பாத்திஹாவோடு சேர்த்து இன்னும் ஒரு சூராவை ஓதுவது சுன்னா (நபிவழி) ஆகும். ஆனால், ஒருவர் சூரத்துல் பாத்திஹாவோடு மாத்திரம் சுருக்கிக் கொண்டு ருகூவுக்குச் செல்வாராக இருந்தால், அவருடைய தொழுகை பூரணமாகச் சேரும். அவருடைய தொழுகையில் எந்தக் குறைபாடும் வராது; இதற்காக அவர் ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்கான சஜ்தா) செய்ய வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →