Dr. ஷேக் முபாரக் மதனி

மன்ஸில் (Manzil) ஓதுவதால் பலன் கிடைக்குமா?

துஆ மன்ஸில் நோய் நிவாரணம் சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
மன்ஸில் (Manzil) ஓதுவதால் பலன் கிடைக்குமா?
பதில்
பதில்:

நம்முடைய வாழ்க்கையில் நாம் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமதிகம் அல்லாஹ்வைத் திக்ரு செய்வது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அல்குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும் என்பதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கென்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள், திக்ருகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகமாகக் கடைபிடிக்க வேண்டும். இந்த துஆக்கள், திக்ருகள் போன்றவற்றை நமக்குத் தொகுத்துத் தரக்கூடிய மகத்தான பணியை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலே இமாம் நவவி (ரஹ்) அவர்கள் "அல்-அத்கார்" என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் "அல்-கலிமுத்தையிப்" என்கிற பெயரில் ஒரு புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள்.

அதேபோன்று, பிற்பட்ட காலத்திலே தொகுக்கப்பட்ட பல துஆ புத்தகங்களும் காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு புத்தகமாகத்தான் இந்த "மன்ஸில்" என்பதும் இருக்கிறது. ஆரம்பக் காலத்திலிருந்து வரக்கூடிய துஆ புத்தகங்களை எடுத்துப் பார்த்தால், அவற்றில் ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான) செய்திகளும் இருக்கும், பலவீனமான செய்திகளும் இருக்கும், சில நேரங்களில் எவ்வித ஆதாரமே இல்லாத செய்திகளும் இருக்கும். இதைப் பிரித்து, பகுப்பாய்வு செய்து, தெளிவுபடுத்தக்கூடிய பணிகளையும் பிற்கால உலமாக்கள் செய்திருக்கிறார்கள். உதாரணமாக, இமாம் நவவி (ரஹ்) அவர்களுடைய அல்-அத்கார் என்ற புத்தகத்தில் வருகிற பலவீனமான ஆதாரமற்ற செய்திகளை உலமாக்கள் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல, அல்-கலிமுத்தையிப் என்ற புத்தகத்தில் உள்ள பலவீனங்களை அகற்றிவிட்டு ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஸஹீஹுல் கலிமுத் தையிப்" என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.

இவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட நிலையில் ஸஹீஹானவற்றை நாம் எடுத்து நடப்பது நம்முடைய பொறுப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் நாம் பார்த்தால், இந்த மன்ஸில் என்கிற தொகுப்பு, நோய் நிவாரணியை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு புத்தகமாக நாம் காணலாம். இதிலே சில செய்திகள் ஹதீஸ்களிலே வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருக்கின்றன. அதேபோல நிறைய செய்திகள் பலவீனமானவையாகவும் இருக்கின்றன. சில விஷயங்கள், அந்தப் புத்தகத்தைத் தொகுத்தவருடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

எனவே நமக்குரிய பொறுப்பு, அல்-அத்கார் என்ற புத்தகத்தைப் படிப்பதோ, ஹிஸ்னுல் முஸ்லிம் என்கிற புத்தகத்தைப் படிப்பதோ, அல்லது மன்ஸில் என்கிற புத்தகத்தைப் படிப்பதோ அல்ல. நம் மீதுள்ள பொறுப்பு என்னவென்றால், அல்லாஹ்வைத் திக்ரு செய்ய வேண்டும், துஆக்களை நாம் அதிகமாக வாழ்க்கையிலே கடைபிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, ஸஹீஹானவற்றை, ஆதாரப்பூர்வமானவற்றை மாத்திரம்தான் நாம் எடுத்து நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் பார்க்கிற போது, இந்த மன்ஸில் என்கிற தொகுப்பிலே நிறைய பலவீனமான செய்திகள் இருக்கின்றன, ஆதாரம் இல்லாத செய்திகளும் இருக்கின்றன, அந்த நூலைத் தொகுத்தவருடைய அனுபவங்களும் அதிலே பகிரப்பட்டிருக்கிறது. எனவே இதில் உள்ளவற்றைப் பின்பற்றுகிறவர்கள், ஸஹீஹானவை எவை என்பதை உலமாக்களிடத்திலே கேட்டுப் பின்பற்றுவதுதான் சிறந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →