Dr. ஷேக் முபாரக் மதனி

ஒருவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டேன், தவ்பா செய்வதற்கு அவரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

புறம் பேசுதல் தவ்பா பாவம் மன்னிப்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
ஒருவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டேன், தவ்பா செய்வதற்கு அவரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
பதில்
பதில்:

புறம் பேசுவது என்பது ஒரு பெரும் பாவமாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே புறம் பேசுவதை நேரடியாகவே தடை செய்துவிட்டு, அது தன் சகோதரனுடைய மாமிசத்தைச் சாப்பிடுவதற்குச் சமமானது என்று ஒப்பிட்டுக் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புறம் பேசுவதை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தப் பெரும்பாவம் இன்று உணரப்படாத ஒரு நிலையிலே பெரும்பாலான மக்களால் சர்வசாதாரணமாகச் செய்யப்படக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. ஒருவர் புறம் பேசிவிட்டார் என்று சொன்னால் அதற்காக அவர் தவ்பா (பாவமன்னிப்பு) செய்ய வேண்டும்.

இந்தத் தவ்பா இரண்டு விதமாக அமைய வேண்டும். ஒன்று அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். இரண்டாவதாக, யாரைப் பற்றிப் புறம் பேசினோமோ அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹுத்தஆலா எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறான். மனிதன் எத்தகைய பாவங்களைச் செய்தாலும், அவற்றிலிருந்து மீண்டு தவ்பா செய்தால் அவன் மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான். ஆனால், மனித உரிமைகளோடு தொடர்புடைய பாவங்களைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட மனிதர்கள் மன்னிக்காத வரையில் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்கிற ஒரு நிலையை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். எனவே, நாம் ஒருவரைப் பற்றிப் புறம் பேசிவிட்டோமாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவ்பா செய்தது போதாது; மாறாக அந்த குறிப்பிட்ட மனிதரிடமும் போய் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

புகாரியில் இடம்பெறக்கூடிய ஒரு ஹதீஸிலே ரசூல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: ஒரு சகோதரனுடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயமாகவோ அல்லது வேறு விஷயமாகவோ நீங்கள் அவனுக்கு அநீதி இழைத்துவிட்டால், அவனிடம் சென்று நீங்கள் மன்னிப்பு கேட்டு ஹலால் ஆக்கிக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் செய்யத் தவறினால், நாளை மறுமையிலே உங்களுடைய நன்மைகள் எல்லாம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய பாவங்களை எல்லாம் நீங்கள் சுமக்க வேண்டி ஏற்படும். எனவே, நாம் யாருக்காவது அநீதி இழைத்திருந்தால், குறிப்பாகப் புறம் பேசி இருந்தால் அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தவ்பாவை அல்லாஹுத்தஆலா ஏற்றுக் கொள்வான். இதுதான் பொதுவான நிலையாகும்.

இருந்தாலும் கூட, சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட நபரிடம் போய், "நான் உங்களைப் பற்றி இவ்வாறு தவறாகப் பேசிவிட்டேன் அல்லது புறம் பேசிவிட்டேன், என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கேட்கப் போகிற போது, அதனால் ஏற்படுகிற விளைவு மிக மோசமானதாக அமையும் என்கிற ஒரு சூழ்நிலை இருக்குமாக இருந்தால், அந்த நேரத்தில் உலமாக்கள் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஒரு சாரார், கட்டாயம் அவரிடம் போய்த் தன் தவற்றைச் சொல்லி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு சாரார், மன்னிப்பு கேட்கச் செல்வதனால் அதைவிட மோசமான விளைவுகளோ பகைகளோ ஏற்படுமாக இருந்தால், அவ்வாறு செய்யாமல் அல்லாஹ்விடம் தூய்மையான முறையில் தவ்பா செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். மேலும், அவரிடம் நேரில் போகாமல் அவருக்காக நாம் துஆச் செய்வது, அவருக்காக இஸ்திக்பார் (பாவமன்னிப்பு) தேடுவது, அவரைப் பற்றி எந்த இடங்களில் எல்லாம் நாம் தவறாகப் பேசினோமோ அந்த இடங்களில் அவரைப் பற்றி நல்ல முறையில் பேசுவதும் அவருடைய சிறப்புகளை எடுத்துச் சொல்வதும் மாற்றுப் பரிகாரமாகக் கடமையாகும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்.

இந்த இரண்டாவது கருத்துதான் மிகவும் ஆரோக்கியமான, நடுநிலையான கருத்தாகப் பின்னால் வந்த அறிஞர்களால் கருதப்படுகிறது. எனவே, புறம் பேசுவதிலிருந்து நம்முடைய நாவைப் பேணிக் கொள்ள வேண்டும். அது நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு பாரதூரமான பாவம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தவிர்க்க முடியாதபடி புறம் பேசி இருந்தால், நேரடியாகச் சென்று மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்தது. ஆனால், அவ்வாறு சொல்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என உறுதியாகக் கருதினால், அவருக்காக துஆச் செய்து, நற்பெயரைப் பரப்பி, அல்லாஹ்விடம் பிழையிரப்பது அவசியமாகும்.

← முந்தையஅடுதது →