Dr. ஷேக் முபாரக் மதனி

கடமையான குளிப்பை (ஜனாபத் குளிப்பை) நிறைவேற்றக்கூடிய முறை என்ன?

குளிப்பு ஜனாபத் தூய்மை பெருந்தொடக்கு

← முந்தையஅடுதது →
கேள்வி
கடமையான குளிப்பை (ஜனாபத் குளிப்பை) நிறைவேற்றக்கூடிய முறை என்ன?
பதில்
பதில்:

இஸ்லாம் ஒரு பூரணமான மார்க்கம் மற்றும் ஒரு வாழ்க்கை திட்டமாகும். அந்த அடிப்படையிலே தான் மனிதனுடைய எல்லா இடங்களிலும் இஸ்லாம் தலையிடுகிறது. அந்த வகையில் ஒருவருக்குக் குளிப்பு கடமையாகிவிட்டால், அதாவது பெருந்தொடக்கு ஏற்பட்டுவிட்டால், அவர் கட்டாயமாகக் குளித்துத் தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. இந்த குளிக்கிற முறையைப் பொறுத்தவரையில் இரண்டு முறைகளை நாம் அவதானிக்கலாம். ஒன்று, வெறுமனே குளித்து பெருந்தொடக்கை நீக்கிக் கொள்வது. இன்னுமொரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையைப் பின்பற்றுவது. இதைச் செய்யும்போது கடமையான குளிப்பு நிறைவேறுவதோடு, நபிவழியைப் பின்பற்றிய நன்மையும் நமக்குக் கிடைக்கிறது.

முதலாவது முறையைப் பொறுத்தவரையில், ஒருவர் கடமையான குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து (எண்ணம்) வைத்துக்கொண்டு ஒரு ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கடலிலோ இறங்கிக் குளிப்பது; அல்லது குளியலறையிலே ஷவரைத் திறந்து குளிப்பது. இப்படி இவர் குளித்துவிட்டால் இவருடைய கடமையான குளிப்பு நிறைவேறிவிடும். இவர் சுத்தமாகி விடுவார். இதற்குப் பிறகு அவர் செய்ய வேண்டிய இபாதத்துகளைச் செய்யலாம். இதிலே, அப்படி குளிக்கிற நேரத்தில் வாயைக் கொப்பளித்துக் கொள்ள வேண்டும், நாசிக்கும் நீர் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உலமாக்கள் வலியுறுத்துகிறார்கள்.

இரண்டாவது முறைதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையாகும். இந்த முறையைப் பின்பற்றுவதுதான் மிகவும் உசிதமானது மற்றும் வலியுறுத்தப்பட்டதாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றப் போகிற ஒருவர், மனதால் நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னுடைய இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு, ஆணோ பெண்ணோ தங்களின் மர்ம உறுப்பை நன்றாகத் தேய்த்துக் கழுவிக் கொள்ள வேண்டும். உடலுறவு கொள்ளும் போது உடலில் ஸ்பெர்ம் (விந்து) அல்லது வேறு ஏதாவது பட்டிருந்தால் அவற்றையும் தேய்த்துக் கழுவிக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, தொழுகைக்காக உளூ செய்வது போன்று பூரணமாக உளூ செய்து கொள்ள வேண்டும். உளூ செய்து முடிந்த பிறகு, தண்ணீரை எடுத்துத் தலையில் மூன்று தடவை ஊற்றித் தலையைத் தேய்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு குளிக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் உடலின் வலது பகுதிக்குத் தண்ணீரை ஊற்றிக் குளித்துக் கொள்வது, பிறகு இடது பகுதிக்கு ஊற்றுவது, அதற்குப் பிறகு முழுமையாகக் குளித்துக் கொள்வது என்ற அடிப்படையில் இது அமைய வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர் கடமையான குளிப்பை சரியான முறையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் நிறைவேற்றியவராகக் கருதப்படுவார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதே சட்டம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் தலையை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். மாதவிடாய் ஏற்பட்டு அதிலிருந்து சுத்தமாகும் போது குளிக்கிற முறையும் இதுதான். அந்த நேரத்தில் தலையை கூடுதலாகத் தேய்த்துக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். வேறு எந்த வித்தியாசங்களும் கிடையாது. இதுவே கடமையான குளிப்பை நிறைவேற்றக்கூடிய சரியான வழிமுறையாகும்.

← முந்தையஅடுதது →