முதலாவதாக, குர்ஆனுக்கு முரண்படுவது என்றால் அது வஹீயாக (குர்ஆனாகவோ ஹதீஸாகவோ) இருக்க வேண்டும். உமர் (ரழி) அவர்களின் கூற்று வஹீ அல்ல. எனவே ஒரு நபித்தோழர் சொல்வது குர்ஆனுக்கோ ஹதீஸுக்கோ மாற்றமாகத் தெரிந்தால் அது 'குர்ஆனுக்கு முரண்பாடு' என்று சொல்லப்படாது; மாறாக அது அவரது தவறான ஆய்வு அல்லது முடிவு என்றுதான் கொள்ளப்படும்.
இரண்டாவதாக, உமர் (ரழி) அவர்கள் மார்க்கம் முழுமை பெறவில்லை என்று எங்கும் கூறவில்லை. "கலாலா போன்ற விஷயங்களுக்கு ரசூல் (ஸல்) அவர்கள் நேரடியாக விளக்கம் சொல்லிச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நான் ஆசைப்படுகிறேன்" என்றுதான் கூறினார்கள். மார்க்கத்தில் சில சட்டங்களை அல்லாஹ் நேரடியாகவும், சிலவற்றைச் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறான்; அவற்றை நாம் இஜ்திஹாத் செய்துதான் எடுக்க வேண்டும்.
இதற்கு நேரடியாக விளக்கம் இருந்திருக்கலாமே என்று ஆசைப்படுவதில் தவறில்லை. இதன் அர்த்தம் மார்க்கம் முழுமை பெறவில்லை என்பதல்ல. அல்லாஹ்வும் ரசூலும் சொல்லியதைக் கொண்டே இஸ்லாம் பரிபூரணமாக முழுமை பெற்றுவிட்டது.