லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் வாங்குபவர் இருவரையும் இஸ்லாம் சபித்துள்ளது; அது முற்றுமுழுதாகக் கூடாது. ஆனால், எந்தச் செயல் 'லஞ்சம்' ஆகக் கருதப்படும் என்றால், இன்னொருவருடைய உரிமையை அல்லது இன்னொருவருடைய வசதியை நான் பறித்து எடுப்பதற்காகப் பணம் கொடுத்தால்தான் அது லஞ்சம். (உதாரணமாக, 10 பேர் வரிசையில் நிற்கும்போது, அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நான் முன்னுரிமை பெறுவதற்காகக் கொடுப்பது லஞ்சம்).
ஆனால், எனது உரிமை பறிக்கப்படுகிற நேரத்தில் அதைக் காப்பாற்றிக்கொள்ள நான் ஒரு தொகையைக் கொடுத்தால் அது லஞ்சமாகாது. எனக்கு உரிமையான விஷயத்தை நான் செய்யப் போகிற நேரத்தில், "நீ பணம் தந்தால்தான் இதைச் செய்வேன்" என்று ஒரு அதிகாரி கேட்கிறான் என்றால், நான் பணம் கொடுத்தால்தான் எனது அடிப்படை உரிமையை அல்லது வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிர்ப்பந்த நிலை இருந்தால், அது லஞ்சமல்ல, மாறாக அது 'கப்பம்'. கப்பம் கட்டுவது மார்க்கத்தில் தடையல்ல; அது எனது உரிமைக்காக நான் செய்யும் கட்டாய நடவடிக்கையாகும். அதை எந்த வகையிலும் பிழை என்றோ, குற்றவாளி என்றோ சொல்ல முடியாது.
சில நேரங்களில் நாம் சட்டப்படி நேர்மையாகச் செயல்பட்டால் நமக்கு அநீதிதான் நடக்கும் (உதாரணமாக, சுங்கத்துறையில் (Customs) சரியாகச் செயல்பட்டாலும் இலஞ்சம் கொடுக்காததால் வேண்டுமென்றே காரியங்களைத் தாமதப்படுத்தி அலைக்கழிப்பார்கள்). இப்படியான சூழ்நிலையில் நாம் நமது உரிமைகளைப் பெறுவதற்காகக் கொடுக்கும் பணத்திற்கு, வாங்குபவனுக்கு மட்டுமே குற்றம் சேரும்; கொடுப்பவர் மீது குற்றம் இல்லை.
உதாரணமாக, இன்சூரன்ஸ் என்பது சூதாட்டமும் வட்டியும் கலந்த ஹராமான விஷயமாக இருந்தாலும், சில இடங்களில் (வாகனம் எடுக்கும்போது தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ், பிளைட் டிக்கெட் எடுக்கும்போது அதிலிருக்கும் கட்டாய இன்சூரன்ஸ், வெளிநாட்டு வேலைக்குச் செல்லும்போது பணியகத்திற்கு (Bureau) கட்டுவது) நாம் நமது அடிப்படை உரிமையைப் பெறுவதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என நிர்ப்பந்திக்கப்பட்டால், அதை ஒரு கப்பம் போலக் கட்டிவிட்டுச் செல்வதில் கொடுப்பவருக்குக் மார்க்க ரீதியாகக் குற்றம் இல்லை.