ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமைப்பினரின் அடிப்படை கொள்கை என்னவென்றால், ஒரு முஸ்லிம் கட்டாயம் ஒரு தலைவருக்கு (அமீருக்கு) கீழ் உடன்படிக்கை (பையத்) செய்திருக்க வேண்டும்; அப்படி பையத் செய்யாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் (அதாவது ஜாஹிலிய்யா மரணம் மரணிக்கிறார்கள்) என்று நம்புவதாகும். இது முற்றிலும் அடிப்படையற்ற, வழிகெட்ட பிரச்சாரமாகும்.
இஸ்லாமிய ஆட்சியாளர் (கலீஃபா) இருந்தால் அவருக்கு பையத் செய்ய வேண்டும் என்பது உண்மையே. ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர் இல்லாத காலத்தில் சிலரை நாங்களாகவே தலைவராக நியமித்து, அவருக்கு பையத் செய்யாவிட்டால் அவர் காஃபிர் என்று சொல்வது இஸ்லாத்திற்கு முரணானது. ரசூல் (ஸல்) அவர்களின் 23 வருட கால வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்பதற்கு பையத்தை ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. கலிமாவை ஏற்றாலே ஒருவன் முஸ்லிமாகிவிடுவான்.
உதாரணமாக, ஒரு யுத்த களத்திற்குச் செல்லும் வழியில் ஆட்டிடையன் ஒருவன் தூரத்தில் கலிமா சொன்னதைக் கேட்ட ரசூல் (ஸல்) அவர்கள், "இவர் நரகிலிருந்து தப்பிவிட்டார்" என்று கூறினார்கள். அங்கு எந்த பையத்தும் கேட்கப்படவில்லை. அதேபோல கறுப்பு நிறப் பெண்மணி ஒருவரை இஸ்லாத்திற்கு அழைத்தபோதும், உஸாமா (ரழி) அவர்கள் ஒருவரைக் கொன்ற நிகழ்விலும் கலிமா மட்டும்தான் சாட்சியாகக் கொள்ளப்பட்டதே தவிர பையத் கேட்கப்படவில்லை. எனவே, பையத் செய்யாவிட்டால் காஃபிர் என்று கூறும் இவர்களது கொள்கை முற்றிலும் பிழையானதாகும்.