ஒரு ஜனாஸாவைத் தோள்களில் சுமந்துவிட்டால் அதனை வேகமாகச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் எவ்விதக் கருத்து முரண்பாடும் இல்லை. "ஜனாஸாவை வேகமாக கொண்டு செல்லுங்கள், அது நல்லதாக இருந்தால் ஒரு நன்மையின் பால் கொண்டு செல்கிறீர்கள், கெட்டதாக இருந்தால் ஒரு தீமையை உங்கள் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தோளில் சுமப்பதற்கு முன்னால் உள்ள குளிப்பாட்டுதல், கபனிடுதல் போன்ற பணிகளையும் வேகமாகவே செய்ய வேண்டும் என்பதே பல அறிஞர்களின் கருத்தாகும். ஒரு முஃமினுக்கு நன்மைகள் அவசரமாகப் போய்ச் சேர வேண்டும் என்ற அடிப்படையில் தாமதமின்றி அடக்கம் செய்வதே சிறந்தது.
எனினும், சில நியாயமான காரணங்களுக்காக ஜனாஸாவைப் பிற்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. உதாரணமாக, வெளிநாட்டில் உள்ள மகன் வருவதற்காக ஓரிரு மணிநேரங்கள் காத்திருப்பது, அரசாங்க அல்லது மருத்துவச் சட்ட ரீதியான அனுமதிக்காகக் காத்திருப்பது, அல்லது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் செய்தது போன்று ஜனாஸாத் தொழுகையில் 40 பேர் (இணைவைக்காதவர்கள்) கலந்து கொண்டு பிரார்த்திப்பதற்காக சிறிது நேரம் காத்திருப்பது போன்றவை நியாயமான காரணங்களாகும். ரசூல் (ஸல்) அவர்களின் ஜனாஸா கூட ஆட்சியாளர் தெரிவுக்காக ஓரிரு நாட்கள் பிற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, உறவினர்கள் அனைவரும் வர வேண்டும் என்பதற்காகப் பல நாட்கள் ஜனாஸாவைக் காரணம் இன்றிப் பிற்படுத்துவது மார்க்கத்தில் குற்றமாகும்.