கண்ணூறு ஏற்படாமல் இருப்பதற்காகக் கறுப்புப் புள்ளி அல்லது பொட்டு வைப்பது என்பது முற்றுமுழுதாக மார்க்க ரீதியாகத் தடைசெய்யப்பட்டதாகும். இது ஷிர்க் (இணைவைப்பு) என்ற வட்டத்திற்குள் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
கண்ணூறு என்பது இஸ்லாம் ஏற்றுக்கொண்ட ஒரு பாதிப்பு. அதை நீக்குவதாகவோ தடுப்பதாகவோ இருந்தால், மார்க்கம் சொல்லித்தரும் வழிகாட்டலின்படி (துஆக்கள் ஓதுதல்) செய்ய வேண்டும்; அல்லது உலக ரீதியாக நிரூபிக்கப்பட்ட மருத்துவக் காரணமாக இருக்க வேண்டும். ஒரு கறுப்புப் பொட்டு வைத்தால் அது கண்ணூறை நீக்கிவிடும், பாதிப்பைத் தடுத்துவிடும் என்று நம்புவது, தாயத்துக் கட்டுவதை எப்படி ஷிர்க் என்று சொல்கிறோமோ அதே போன்ற ஒரு ஷிர்க்கான (இணைவைப்பான) நம்பிக்கையாகும். தாயத்து எப்படி பாதிப்பைத் தடுக்கும் என்பதற்கு மார்க்க, மருத்துவ ஆதாரங்கள் இல்லையோ, அதேபோலத்தான் இந்தக் கறுப்புப் புள்ளியும்.
சிலர், "நான் கண்ணூறை நீக்குவதற்காக இதை வைக்கவில்லை; குழந்தை ரொம்ப அழகாக இருப்பதால், அந்த அழகைக் கொஞ்சம் குறைத்துக் காட்டுவதற்காகவே கறுப்புப் பொட்டு வைக்கிறேன்" என்று கூறுகிறார்கள். அதுவும் மார்க்க ரீதியாகத் தடைசெய்யப்பட்டதே. ஏனெனில், மனித முகத்தை அலங்கோலமாக்க வேண்டாம், முகத்தின் அழகைக் குறைத்து அருவருப்பாக மாற்ற வேண்டாம் என்று ரசூல் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகத் தடுத்துள்ளார்கள்.
எனவே, ஷிர்க் என்ற அடிப்படையிலோ அல்லது முகத்தை அலங்கோலப்படுத்துதல் என்ற அடிப்படையிலோ, எப்படிப் பார்த்தாலும் குழந்தைகளுக்குக் கறுப்புப் பொட்டு வைப்பது இஸ்லாத்தில் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.