ரசூல் (ஸல்) அவர்கள் சுன்னத் தொழுகைகளாகப் பல தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள். அதில் மிக முக்கியமானது "சுன்னன் ரவாத்திப்".
1. சுன்னன் ரவாத்திப் (12 ரக்அத்துகள்):
பஜ்ருக்கு முன்னால் 2 ரக்அத்துகள், ளுஹருக்கு முன்னால் 4 ரக்அத்துகள், ளுஹருக்குப் பின்னால் 2 ரக்அத்துகள், மஃரிபுக்கு பின்னால் 2 ரக்அத்துகள், இஷாவுக்கு பின்னால் 2 ரக்அத்துகள் என ஒரு நாளைக்கு மொத்தமாக 12 ரக்அத்துகள் ரவாத்திப் சுன்னத்துகள் உள்ளன. இதைத் தொடர்ந்து தொழுபவர்களுக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
2. அதானுக்கும் இகாமத்துக்கும் இடையிலான தொழுகை:
ஒவ்வொரு அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் தொழுகை உண்டு என்று ரசூல் (ஸல்) கூறியுள்ளார்கள். அதனடிப்படையில், அஸருக்கு முன்னால் 2 ரக்அத்துகள், மஃரிபுக்கு முன்னால் 2 ரக்அத்துகள், இஷாவுக்கு முன்னால் 2 ரக்அத்துகள் தொழலாம்.
3. அஸருக்குப் பின்னால்:
அஸருக்குப் பின்னால், சூரியன் மறைய ஆரம்பிப்பதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகளை ரசூல் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் வளமையாகத் தொழுத செய்திகள் உள்ளன.
ஆனால், ளுஹருக்குப் பின்னால் 4 ரக்அத்துகள் என்றோ, அஸருக்கு முன்னால் 4 ரக்அத்துகள் என்றோ வரக்கூடிய செய்திகள் பலவீனமானவை ஆகும்.