ஏழு கிராஅத் என்பது அரபு நாட்டு மக்களுடைய மொழிநடை அல்லது வட்டாரப் பேச்சுவழக்கு வித்தியாசங்களின் தொகுப்பு என்பதோ அல்லது முஅல்லிம்கள் ஓதிக் கொடுக்கும் போது ஏற்பட்ட உச்சரிப்புப் பிழைகளின் தொகுப்பு என்பதோ முற்றுமுழுதாக தவறான, அறியாமையான வாதமாகும். அல்லாஹு ரப்புல் ஆலமீனே குர்ஆனை ஏழு முறைகளில் ஓதக்கூடிய அமைப்பில் இறக்கி வைத்தான்.
ரசூல் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறக்கப்பட்டவுடன், ஒரே முறையில் மட்டுமே ஓத வேண்டும் என்று சொன்னால் பல்வேறு அரபு கோத்திரத்தினரைக் கொண்ட எனது சமுதாயம் கஷ்டப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கிணங்க, இலகுபடுத்துவதற்காக ஏழு முறைகளில் அல்லாஹ் அதனை இறக்கினான். இந்த ஏழு முறைமை என்பது முதலாவது முறை, இரண்டாவது முறை எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதல்ல. மாறாக, ஒட்டுமொத்த குர்ஆனிலும் ஓதப்படுகின்ற பல்வேறு வித்தியாசங்களை (உதாரணமாக, கஸ்ரா-ஃபத்ஹா மாறுவது, ஹம்மாலத்துல்-ஹம்மாலத்தல் என மாறுவது, மாலிகி-மலிகி என மாறுவது) தொகுத்துப் பார்த்தால் ஏழு வகைகளுக்குள் அவை அடங்கும் என்பதே அதன் அர்த்தமாகும்.
பிற்காலத்தில் வந்த கிராஅத் துறை அறிஞர்கள், உலகின் பல்வேறு இஸ்லாமிய மாகாணங்களில் (மக்கா, மதீனா, கூபா, பஸ்ரா, ஷாம்) மிகப் பிரபல்யமாக, தலைமுறை தலைமுறையாக, தடையின்றி (முத்தவாத்திராக) ஓதப்பட்டு வந்த இந்த இறைவனின் ஓதல் முறைகளைத் தொகுத்து, அந்தந்த முஅல்லிம்களின் (ஓதிக்கொடுத்த இமாம்களின்) பெயரால் வகைப்படுத்தினார்கள். உதாரணமாக "ஹப்ஸ்" ஓதிய முறைமை, "வர்ஷ்" ஓதிய முறைமை என இவை அழைக்கப்பட்டன. எனவே, ஹப்ஸ் கிராஅத் பொய்யானது, வர்ஷ் கிராஅத் பொய்யானது என்று சொல்வது, குர்ஆனின் பாதுகாப்பையே கேலிசெய்வதாகும். இது மனிதர்களின் உச்சரிப்புப் பிழையல்ல, மாறாக அல்லாஹ்வால் இலகுபடுத்தலுக்காக இறக்கப்பட்ட முறையான ஓதல் முறைமைகளாகும்.